படம் அப்பவே முடிஞ்சிடுச்சே!!!
பொதுவாக கமல்ஹாசன் - கிரேஸி மோகன் காம்பினேஷன் படங்களை (குறிப்பாக சதிலீலாவதி, மைக்கேல் மதன காமராஜன்) பார்க்கும்போது கடைசியில் கிளைமேக்ஸில் கதைக்கு சம்பந்தமில்லாமல் ஒரு சேஸ் காட்சி வரும். பார்க்க சுவாரசியமாக இருந்தாலும் ”படம் அப்போவே முடிஞ்சிடுச்சே”ன்னு தோன்றும். இன்னும் சில புத்தகங்களையோ, திரைப்படங்களையோ படிக்கும்போது / பார்க்கும்போது, இந்த கடைசி 20 பக்கங்கள் / 10 நிமிடங்கள் இல்லாமல் இருந்திருந்தால் இது classic-ஆக இருந்திருக்கும் என்று தோன்றும். இதே நினைப்பு / தோன்றுதல் சில உறவுகளிலும், நட்பினிலும் தோன்றலாம். ஒருவேளை இந்த நட்பு / உறவு முன்பே முடிந்திருந்தால் அது காலத்துக்கும் நினைத்து நினைத்து சிலாகிக்ககூடிய நிகழ்வாக இருந்திருக்கும் என்று தோன்றும். நமக்கு மிகவும் பிடித்திருந்த சிலரை ஒரு பிரிவுக்கு பிறகு சந்திக்கும்போது இவர்களை மீண்டும் சந்திக்காமலேயே இருந்திருக்கலாம் என்று தோன்றும். ஒரு உறவுக்கு நாம் கொடுக்கும் மரியாதை அதை தொடர்வதிலேயே மட்டுமல்ல, அதை விட்டு விலகுவதிலும் கூட இருக்கிறது.