(குறி தவறிய) மன்மதன் அம்பு
”மன்”னார், “மதன”கோபால், “அம்பு”ஜாக்ஷி ஆகியோரிடையே நிகழும் உணர்ச்சிகரமான கண்ணாமூச்சி ஆட்டம் தான் “மன்மதன் அம்பு”. படத்தின் பேர் தான் கிளுகிளுப்பாக உள்ளது ஆனால் (ஆச்சரியமாக) இந்த கமல் படத்தில் முத்தங்கள் இல்லை, இரட்டை அர்த்த வசனங்கள் இல்லை... சொல்லப்போனால் நல்லதிரைக்கதையும் இல்லை. படத்தின் முதல் குழப்பம் - இதை உணர்ச்சிப்போராட்டமாக கொண்டுபோவதா இல்லை நகைச்சுவையாக கொண்டுபோவதா என்கிற தெளிவு இல்லாதது. இரண்டாவது குழப்பம் - கிட்டத்தட்ட “மின்சார கனவு” படத்தின் சாயல் எளிதில் முடிவை யூகிக்க வைப்பது. கமல் நல்ல நடிகர் என்பதில் ஐயமில்லை, ஆனால் திரைக்கதையாசிரியராக, (நிழல்) இயக்குநராக அவரது ரெண்டுங்கெட்டான் நிலையும் ஐயமில்லை. அதனால் “மன்மதன் அம்பு”வை பார்க்க உட்காரும்போதே சில இழுவைகளுக்கு மனதை தயார் படுத்திக்கொண்டே உட்கார்ந்தேன். எனினும் எதிர்பார்த்ததைவிட கூடுதல் இழுவை போட்டு கமல் தன்னை நிரூபித்துவிட்டார் என்றே சொல்லவேண்டும்.