அகிலனின் சித்திரப்பாவை
அகிலனின் சித்திரப்பாவை - தமிழுக்கு முதன்முதலில் சாகித்திய அகாடெமி விருதை கூட்டிவந்த பெருமை இந்த நாவலுக்கு உண்டு. இதை நான் முதலில் டி.டி-1ல் தொலைக்காட்சி தொடராக பார்த்திருக்கிறேன். அப்போது நான் ஏழாவது படித்துக்கொண்டிருந்தேன். சற்று complex-ஆன கதையெங்கிலும், அந்த இளம் வயதிலேயே எனக்கு மனதை கவர்ந்த படைப்பாக விளங்கியது. இருப்பினும் அதை புத்தகமாக படிக்க ஏன் எனக்கு இத்தனை ஆண்டுகள் பிடித்தன என்பது சற்று விந்தையே. கடந்த முறை மதுரைக்கு போனபோது, நான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகே இருந்த ”சர்வோதயா நூல் நிலையத்”தில் இந்த புத்தகத்தை வாங்கினேன். ஆனால் அடுத்தடுத்த வார இறுதிகளில் சேலம், மற்றும் ஆலப்புழைக்கு போனபோதே இதை படித்து முடிக்க முடிந்தது. இதை படிக்கும்போதே ஏன் இதற்கு விருது கொடுக்கப்பட்டது என்று தெளிவாக புரிந்தது. 1960-களின் இறுதியில், சென்னைப்பட்டணம் “மதராஸ்” ஆக மாறி வரும் காலக்கட்டத்தில், அதே நேரத்தில் பழைய தலைமுறையும், கலாச்சாரமும் மாறிவரும் சூழ்நிலையில், மனிதத்தையும், கலாச்சாரத்தையும் மதித்து புதிய பொருளாசை நிறைந்த கலாச்சாரத்துக்கு மாறமுடியாத மனிதர்களின் பின்புலத்தில், கலையும், காதலும் வழிந்தோடிய அற்புதமான கதை இது. இதை படித்து முடிக்கும்போது இதில் வரும் ஆனந்தியும், அண்ணாமலையும், மாணிக்கமும், சுந்தரியும் ரத்தமும் சதையுடனும் நம்மிடையே உலாவிய பாத்திரங்களைபோல ஒரு பாதிப்பை ஏற்படுத்துகின்றார்கள்.