ம்ம்... அப்புறம்?!
என் முன்னாள் பாஸ் ஒருமுறை சொன்னார் - “உனது ப்ளாகுகளை படித்துவிட்டு உன்னை சந்திப்பவர்களுக்கு நிச்சயம் ஏமாற்றம் தான் மிஞ்சும்”. காரணம் - நான் எழுதுவதை படித்துவிட்டு நான் நிறைய பேசுபவன் என்று வாசகர்கள் எண்ணக்கூடும். ஆனால் எனக்கு ஃபோன் செய்தீர்களானால் நிச்சயம் கியாரண்டியாக அடுத்த 2-3வது நிமிடத்தில் உங்கள் வேலையை தொடர போய்விடலாம். ஃபோனில் மணிக்கணக்கில் பேசுபவர்களை கண்டால் எனக்கு ஒரு வித பிரமிப்பு தான் தோன்றும் - பேசுவதற்கு இவ்ளோ விஷயங்கள் இருக்கிறதா என்று. எனக்கோ நேரடியாக விஷயத்துக்கு வரவேண்டும். அது குறித்து பேசி முடித்தவுடன் - வேறு என்ன பேசுவது என்று தெரியாது. “அப்புறம்....”, “வேற என்னடா?” போன்ற கேள்விகள் கொஞ்சம் அலர்ஜி தான். அதுவும் அந்த கேள்விகள் தொடர்ந்து வரும் பட்சத்தில் நான் அம்பேல். குறிப்பாக பழைய நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் பேசும்போது தொடர்ந்து ரெண்டு பக்கமும் மாத்தி மாத்தி “அப்புறம்”... “வேற..” வரும்போது எப்போதுடா பேச்சை முடிப்பாங்கன்னு இருக்கும். என்னையும் மதிச்சு ஃபோன் பண்ணியிருக்காங்க, என் கிட்டே இன்னும் கொஞ்ச நேரம் பேசனும்னு ஆசைப்படுறாங்கன்னு தெரிஞ்சாலும் என்னால வெட்டியா மொக்கை போட முடியலையே! எனக்கு நல்லா தெரிஞ்ச விஷயம் பத்தி கேளுங்க... மணிக்கணக்குல லெக்சர் எடுக்குறேன். இல்லைன்னா எனக்கு புதுசான விஷயத்தை சொல்லுங்க... நான் எவ்ளோ நேரம்னாலும் கேட்டுக்குறேன்... ஆனா ரெண்டு தடவை “அப்புறம்”.. “வேற என்ன விஷயம்?” வந்தா ஃபோனை கட் பண்ணிக்குறதை தவிர எனக்கு வேற வழி தெரியலை. அதுக்காக நான் திமிர் புடிச்சவன் இல்லை... என்னால முடியலை!!! நான் ஒரு நல்ல ‘conversationalist" கிடையாதுங்குறது என்னுடைய வட்டத்தில் எல்லாருக்கும் தெரியும். எனக்கு புடிச்ச சில விஷயங்கள் தவிர்த்து மற்ற விஷயங்கள் என்னால பேச முடியாது. அதனால நான் வெறுமனே உளறிகொட்டுறதை விட அமைதியா இருக்குறதே உத்தமம்னு நினைக்கிறவன். என் பொண்டாட்டி கூட என்னை திட்டி, குதறி பாத்துட்டா... எனக்கு தான் மொக்கை போட வரமாட்டேங்குது. நான் என்ன வச்சுகிட்டா வஞ்சனை பண்றேன்? அதே மாதிரி எதிர் முனையிலே பேசுறவங்களும் எப்போ ஒருத்தர் “அப்புறம்..”, “வேற..”ன்னு தினறுராங்களோ, அப்போவே பேச்சை கட் பண்ணினாங்கன்னா மரியாதை / அன்பு குறையாம இருக்கும்ங்குறது என்னோட அபிப்பிராயம். இல்லைன்னா ”திமிர் புடிச்சவன், பேசமாட்டேங்குறான்”, “சரியான தத்தி..”ன்னு அனாவசியமான எதிர்மறையான அபிப்பிராயங்கள் வந்து உறவை பங்சர் பண்ணிடும்.