Relationships
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

Relationshipsநீங்கள் ஒரு உறவில் இருக்கிறீர்கள்.. அந்த உறவின் ஆரம்ப நாட்களை நினைவு கூரமுடியுமா? முதல் முதலில் உங்கள் நண்பரை பரிச்சயம் செய்துக்கொண்ட நாள், மெதுவாக போன் நம்பர்களோ இல்லை முகவரியோ பரிமாறிக்கொண்ட தருணங்கள், முதல் கடிதம், முதல் போன் கால்... நினைத்தாலே சிலிர்ப்பாக இருக்கும். இது காதலர்களுக்கு மட்டும் என்று சொல்லவில்லை... எந்த ஒரு உறவாயினும் - சாதாரண சக ஊழியராகவோ இல்லை வகுப்பு தோழராகவோ வந்த நண்பர் உங்கள் வாழ்வின் முக்கிய நண்பராக மாறிய காலகட்டம்... எல்லா உறவுகளும் அதே இடத்தில் நின்றுவிட்டால் எவ்வளவு அழகாக இருக்கும்? நமக்கு மட்டும் சக்தி இருந்தால் காலச்சக்கரத்தை அங்கேயே நிறுத்திவிடமாட்டோமா? கிட்டத்தட்ட எல்லாருக்குமே தான் இது பொருந்தும். ஆனால் நிஜ வாழ்க்கையில் அப்படியா நடக்கிறது? வாழ்க்கையின் ஏதோ ஒரு கட்டத்தில் அந்த உறவின் மேலே ஒருவித Taking for granted/அலுப்பு/வெறுப்பு என நிலைகள் மாறிக்கொண்டு தானே இருக்கிறது? இல்லையென்றால் என் பல காதல் திருமணங்கள் விவாகரத்திலும், பல பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களிடம் பகைமை பாராட்டும் வழக்குகளை நம்முடைய வழக்கு மன்றங்களிலும், தினசரி வாழ்க்கையிலும் காண நேர்கின்றன.

இந்த வெறுப்பு ஒரே இரவிலோ இல்லை ஒரே க்ஷணத்திலோ வருவதில்லை. ஏதோ ஒரு கணத்தில் ஏற்படும் கோபம்/வருத்தம் என்னும் விதை வேர் விட்டு கிளை விட்டு பின்னொரு சமயத்தில் உறவின் அஸ்திவாரத்தையே இடித்துவிடுகிறது. அந்த ஒரு கணம் தான் உறவின் Novelty/fancy-யை உதறடிக்கும் கணம். காதலிக்கும் போது திட்டினால் "என் மேல் அவருக்கு/அவளுக்கு ரொம்ப அன்பு/possessiveness இருக்குறதால தான் கோபம் வருகிறது" என்று ஏற்படும் சந்தோஷம் பின்னொரு சமயத்தில் "எதுக்கெடுத்தாலும் கோவிச்சுக்கூட்டு வள்ளுன்னு விழறதே பொழப்பா போச்சு" என்றும், காதலிக்கும்போது "உனக்கு கோபமே வராதாப்பா?" என்று ஆச்சரியப்படும் காதலர்கள் பின்னொரு சமயத்தில் "எழவு... எதுக்கெடுத்தாலும் கல்லு மாதிரி உணர்ச்சிகளை வெளிக்காட்டிக்காத ஜடம்" என்று அலுத்துக்கொள்வதிலும் சம்பந்தபட்டவர்களின் உறவுகள் எங்கே போய்க்கொண்டிருக்கின்றன என்பதை நமக்கு சொல்லும். Beauty lies in the eyes of the beholder என்று சொல்வார்கள்.

எல்லா உறவுகளும் காலப்போக்கில் உருமாறுகின்றன. Product Life Cycle போல உறவுகளிலும் "அறிதல், புரிதல், முதிர்ச்சி, அலுப்பு, முடிவு" என பல நிலைகள் வரும். ஆனால் இந்த நிலைகள் வரும் காலகட்டம் மாறிப்போகலாமே தவிர வராமல் இருக்காது. அதற்காக எல்லா அலுப்புகளும் வெறுப்பிலோ இல்லை உதாசீனத்திலோ முடிவதில்லை. மாறாக ஒருவித indifference-ல் சென்று எந்த விட Drama-வும் இல்லாமல் அடங்கிவிடலாம். நட்பு, காதல், கல்யாணம் என எல்லா உறவுகளுக்கும் இது பொருந்தும். நாம் கையில் உள்ளது என்னவென்றால் - இந்த நிலைகளை தள்ளிப்போட முடியும். அவ்வளவே! நமது பெரியவர்கள் "working in the relation" என்று சொல்வது இந்த நிலைகளை நம்மால் முடிந்த வரை தள்ளிப்போட முயற்சி செய்வதை தான்.

இன்றைய வேகமான காலகட்டங்களில் ஒரு வகையில் எல்லாமே வேகமாக முடிந்துவிடுகிறது. முன்பு மேலை நாடுகளை சொன்னோம் - அவசரம் அவசரமாக காதலித்து, தங்களுடைய காதலை கட்டுபடுத்தமுடியாமல் பொது இடம் என்று கூட பாராமல் காதல் புணர்ந்து, பின்னர் கல்யாணம் முடிந்த ஒரு வருடத்துக்குள் காதல் அணை வற்றிப்போய் விவாகரத்து செய்து... இப்போது நம்மூரிலும் கிட்டத்தட்ட இதே கதை தான். அதற்காக பழைய காலத்தில் எல்லாம் எல்லா உறவுகளும் perfect-ஆக இருந்தது என்று அர்த்தமில்லை. அப்போதைய மக்களுக்கு மனதளவில் சோரம் போக மட்டுமே தைரியம் இருந்தது.. இப்போதைய தலைமுறைக்கு அதை உடலளவில் சோரம் போகவும் தைரியம் சேர்ந்துள்ளது அவ்வளவே!

அது என்ன ”மூடிய கையில் பத்து பைசா...”? உள்ளங்கைக்குள் ஒரு பத்து பைசாவை வைத்து மூடிக்கொண்டால் ”உள்ளே என்ன இருக்கும்” என்று மற்றவர்கள் அறியாத வரை தான் கையை விரிக்க சொல்லி எல்லா கலாட்டாக்களும் நடக்கும். இந்த ஆர்வம் தான் 'Novelty' factor. உள்ளே என்ன இருக்கிறது என்று தெரிந்த பிறகு ”அவ்வளவு தானா?” என்று அடுத்த வேலையை பார்க்க போய்விடுவோம். உறவுகளும் இது போல தான். புதிய நட்பு உருவாகும்போது, காதலிக்கும்போது எப்போதும் ஒன்றாக நேரம் செலவழிக்கவேண்டும், விடிய விடிய பேசவேண்டும் என்று தோன்றுவது எல்லாம் இந்த உள்ளங்கையை திறக்கும் முயற்சி தான். கடைசியில் ஒரு familiarity வந்தபிறகு / உள்ளங்கை பிரிக்கப்பட்ட பிறகு “இவ்வளவு தானா” என்று தோன்றலாம்.. அல்லது ”இது பத்து பைசா... இதை கொண்டு இது இதை செய்யலாம்... இவ்வளவு தான் செய்யலாம்” என்று புரிந்துகொண்டு அதற்க்கேற்ப நடக்கலாம். நமது உறவுகளும் அப்படியே தான். ரொம்ப எதிர்பார்த்து திறப்பவர்கள் பத்து பைசாவை பார்த்து ஏமாறுகிறார்கள்... மற்றவர்கள் பத்து பைசாவை உபயோகமாக வைத்துக்கொள்ள முயற்சிக்கிறார்கள்.

"இப்படி வளவளவென்று உளறிக்கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு என்ன சொல்ல வர்றே நீ?"ன்னு நீங்க கேட்குறது எனக்கும் கேட்குது. நான் அறிவுரை சொல்லும் அளவுக்கு பெரிய மனுஷனோ இல்லை அனுபவசாலியோ இல்லை. உறவுகளில் அந்த Novelty-யை காப்பாற்ற, உறவின் நிலைகளின் காலத்தை முடிந்தவரை தள்ளிப்போட முயற்சித்துக்கொண்டிருக்கும் சாதாரண மனிதன் நான்
. எனது வாழ்க்கையில் பலர் வந்தும் போய்க்கொண்டும் இருக்கிறார்கள் சிலர் வந்து போகும்போது வேதனையாக இருக்கும், சிலர் வந்தபோது சந்தோஷமாக இருந்தாலும் காலப்போக்கில் எப்போதுடா இடத்தை காலி செய்வார்கள் என்று இருக்கும். எனது நண்பர்களில் சிலர், அதுவும் காதலித்து கல்யாணம் செய்துக்கொண்டவர்களே தங்கள் உறவில் ஒருவித ஏமாற்றத்தை உணரும்போது, எனது வாழ்க்கையிலும் ஒருவித Fatigue factor-ஐ உணர்ந்தபோது என் இப்படி ஆகிறது, எங்கிருந்து இந்த புள்ளி ஆரம்பித்தது என பின்னோக்கி உறவுகளை அலசியபோது எனக்கு இவற்றை எழுதவேண்டும் என்று தோன்றியது.

யாரிடம் என்ன எதிர்பார்க்கமுடியும் என்ற அடிப்படை புரிந்துவிட்டால் ஓரளவுக்கு முதிர்ச்சி நிலையிலிருந்து ‘அலுப்பு’ நிலைக்கு போவதை தவிர்க்கலாம். அதே சமயத்தில் ‘Economy of expressions'-ஐ கடைபிடித்தாலும் ஓரளவுக்கு ‘novelty'ஐ காப்பாற்றலாம். உதாரணம் - எப்போதும் கோபப்பட்டால் ’இவனுக்கு / இவளுக்கு வேற வேலையில்லை... முணுக்குன்னு கோவிச்சுக்குறது தவிர..” அன்று கோபத்துக்கு மரியாதை இல்லாமல் போவதையும், ”ஆரம்பத்திலே விடிய விடிய பேசினே / கொஞ்சினே... இப்போ பேசக்கூட நேரமில்லைய்யா / தோணலையா” போன்ற தருணங்களை தவிர்க்கலாம். எனது சில முக்கிய உறவுகளின் நிலையை புரிந்துகொண்டதால், மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் ஓரளவுக்கு கிடைத்துள்ளதாக தோன்றுகிறது.

உதாரணத்துக்கு சொல்லவேண்டுமென்றால் - எனது விஜயகிருஷ்ணனின் நட்பை சொல்லலாம். நாங்கள் chat செய்ய ஆரம்பித்த காலத்தில் தினமும் 1-2 மணி நேரங்களாவது கட்டாயம் பேசிக்கொள்வோம். இப்போது அவரது புதிய வேலையின் பளு காரணமாக இப்போது நாங்கள் பேசிக்கொள்வதே அபூர்வமாக உள்ளது. அப்படியே பேச ஆரம்பித்தாலும் 10 நிமிஷத்துக்கு மேலே போவதில்லை. அதற்காக அன்பு இல்லை என்று சொல்லவில்லை... மாறாக என்னுடைய / அவருடைய வேலை சூழல் இதுவாக இருக்கலாம் இல்லை எங்கள் நட்பு "அறிதல்", "புரிதலை" கடந்து "முதிர்ச்சி" நிலையை அடைந்திருக்கலாம் so that இனிமேல் பேசி பேசி தான் எங்கள் அன்பை நிலைநிறுத்தவேண்டும் என்ற நிலைமை இல்லாமல் இருப்பதால் இருக்கலாம்... Worse come worse.. ஒருவருக்கொருவர் அலுத்துபோயிருக்கலாம்... ஆனால் அன்பு குறைதலோ இல்லை வெறுப்போ தோன்றவில்லை.. நான் கூட ஒரு நாள் சொன்னேன் "நாம unfriend செய்துக்கொண்டு 2-3 மாதங்கள் கழித்து friend request அனுப்புங்க. அப்போவாவது பேச ஏதாவது விஷயம் கிடைக்குமா என்று பார்க்கலாம்" என்று. மாறாக நம்பிக்கை இல்லாமல் எங்களுக்கிடையே ஒரு நிரூபணம் தேவைப்பட்டிருந்தால் இந்நேரம் இந்த நட்பு உடைந்து போயிருக்கும்.

போன பதிவில் ஜொள்ளு விட்டு கேட்டு எழுதிய ”எங்கேயும் எப்போதும்” பாடலில் வந்த அனன்யா வாசித்த கவிதையான -

நம்பவில்லை..
நம்பினேன்..
ஏன் நம்பவில்லை?
எதற்காக நம்பினேன்?
நம்பியதற்கும்.. நம்பாததற்கும்
காரணம் உண்டோ?
உண்டு...
நம்பிக்கை தான் வாழ்க்கை...

இப்போது அர்த்தமுள்ளதாக தெரிகிறது. :-)