Tamil
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

Sadhurangamசில மாதங்களுக்கு முன்பு எனது பழைய பதிவுகளை திரும்பி பார்த்தபோது ஆர்வக்கோளாரில் குப்பை படங்களுக்கும், பாடல்களுக்கும் பதிவு எழுதி வீணடித்ததை நினைத்து, இனிமேல் (atleast இந்த வருடத்தில்) சினிமா குறித்த பதிவுகள் எழுதுவதில்லை என்று முடிவு செய்தப்புறம் தான் “தெய்வத்திருமகள்", “எங்கேயும் எப்போதும்" மற்றும் கரு. பழனியப்பனின் சமீபத்திய ரிலீஸ் “சதுரங்கம்" என வரிசையாக நல்ல தமிழ் படங்களாக பார்க்க நேர்கிறது. எனவே எனது கொள்கையை காற்றில் விட்டுவிட்டு இந்த படங்கள் பார்த்ததை எனது பதிவில் பதிவு செய்யவேண்டும் என்று தோன்றி எழுதப்பட்ட பதிவு இது. “பார்த்திபன் கனவு“ பெற்ற பெரும்வெற்றிக்கு பிறகு கரு. பழனியப்பன் - ஸ்ரீகாந்த் கூட்டணியில் உருவான “சதுரங்கம்“ கிட்டத்தட்ட ஏழு வருடங்களுக்கு பிறகு வெளியாகியுள்ளது. இந்திய தொலைகாட்சிகளில் முதல் முறையாக நேரடியாக டி.வியில் வெளியாகும் படம் என்ற “பெருமை“யை பெறும் என்று என்னை போன்ற சாதாரண ரசிகர்கள் பலரும் கைவிட்டுவிட்ட நிலையில், சற்றும் மனம் தளராமல் போராடி திரையில் வெளியிட்டிருக்கும் திரைப்படக்குழுவினருக்கு மனமார்ந்த பாராட்டுகள்.

கரு. பழனியப்பன் படங்கள் என்றாலே தென்றலை போன்ற இனிமையான தாலாட்டும் வேகத்தில், புத்திசாலித்தனமாக பேசும் கதாபாத்திரங்கள், யதார்த்தத்தை மீறாத காட்சியமைப்புகள் என்று கிட்டத்தட்ட “முத்திரை“ குத்தப்பட்ட நேரத்தில் இவை அனைத்திற்கும் முற்றிலும் முரண்பட்டு பரபரவென பறக்கும் திரைக்கதை, ஹீரோயிஸம் என்று வந்திருக்கும் வித்தியாசமான படம் தான் “சதுரங்கம்“. பத்திரிகையாளனை கதாநாயகனாக கொண்டு investigative journalism-ன் பின்புலத்தில் வந்திருக்கும் இந்த படத்தில் முக்காலே மூணு வீசம் யதார்த்தம். ஆனந்த விகடன் மீது வழக்கு, ‘இந்து’ ராம் கைது, வை.கோ பேச்சு என படத்தின் வசம் முழுவதிலும் உண்மையான சம்பவங்களின் reference இருப்பதினால் எந்த இடத்திலும் realism-க்கு குறைவில்லை. ஒரு புலனாய்வு பத்திரிகையாளனின் வாழ்வில் நடக்கும் சில சம்பவங்கள் அவர்கள் எப்படி ஆபத்தின் விளிம்புகளில் ஜீவிக்கிறார்கள் என்றும், அந்த rough and tough மனிதர்களுக்குள்ளும் மலரும் காதல்.. அந்த மென்மை என அழகாக சமன் செய்து திரைக்கதையை முற்பகுதியில் கொண்டுபோயிருக்கிறார் கரு. பழனியப்பன். மென்மையாக பேசும் அவரது ”அக்மார்க்” கதாநாயகன், முத்தம் கேட்பதில் கூட ”நிறைய” பேசும் கதாநாயகி பாத்திரம் என கரு. பழனியப்பன் ”டச்” இருந்தாலும் பிற்பகுதியில், பரபரக்கும் திரைக்கதையில் கடைசியில் காணாமல் போய்விடுகிறார் கரு. பழனியப்பன்.

கண் முன்னாலேயே காதலி கடத்தப்படும் காட்சியும் அதற்கு முன்பு நம்மை “தயார்படுத்தாத” காதல் என நல்ல twist. அதற்குப்பிறகு தொடங்கும் ஆடுபுலி ஆட்டம் (படத்தில் டி.பி கஜேந்திரன் ஒரு முறை விளையாடுகிறார்) அல்லது சதுரங்கம் (வில்லனும், கதாநாயகனும் பரஸ்பரம் செக்மேட் வைத்துக்கொள்கிறார்கள்) விறுவிறுப்பு என்ற போதும் கடைசியில் தனது தீவிர ரசிகர்களை ஏமாற்றியிருக்கிறார் கரு. பழனியப்பன். காதலியை தேடி பல இடங்களுக்கு அலைய வைப்பதற்கு “வில்லன்“ சொல்லும் காரணம் சுவாரசியம் என்ற போதும் அதை தொடரும் காட்சிகள் தெலுங்கு சினிமாத்தனமானவை. ”அது என்ன தெலுங்கு சினிமாத்தனம்?” என்று நீங்கள் கேட்கலாம். ஏனென்றால் கதாநாயகியை ”விபச்சார விடுதியில்” அடைக்கும் காட்சியிலிருந்து கடைசி க்ளைமேக்ஸ் வரை அப்படியே கிருஷ்ணா வம்சியின் ”குலாபி” என்ற 1995-ல் வெளியான தெலுங்கு படத்தின் (தழுவல் இல்லை... நேரடி) காப்பி. உண்மையை கேட்டு அடியாளின் உள்ளங்கையை கதாநாயகன் screw driver-ல் car bonnet-ஒடு சேர்த்து குத்துவது, அந்த முஸ்லீம் கல்யாணம்... கடைசியில் கதாநாயகி கதாநாயகனிடம் வில்லனை பார்த்து “அவனை கொல்லு..” என்று கத்துவது உட்பட ”அப்படியே“ சுட்டிருக்கிறார் கரு. பழனியப்பன். இதில் பட்ஜெட் காரணமாக ரயில்வே ஸ்டேஷனில் சண்டை, தெலுங்கில் ஏர்போர்ட்டில் சண்டை... அவ்வளவே வித்தியாசம். இந்த கடைசி இருபது நிமிடத்தை மட்டும் கழித்துவிட்டு பார்த்தால் சதுரங்கம் உண்மையிலேயே சுவாரசியம்.

ஸ்ரீகாந்த் மீது எனக்கு எப்போதுமே பெரிய அபிப்பிராயம் இருந்ததில்லை. கண்களில் சின்ன சோகம் எப்போதும் இழைந்தோடும் சோனியா அகர்வால் “சந்தியா“வாக நிறைவாக செய்திருக்கிறார். ”நான் தானே உன்னை காதலித்தேன்... முத்தம் கேட்டேன்” என்று ஏங்குவதற்கு சரியான தேர்வு. ”பில்டராக” வரும் மகாதேவன் (அது தாங்க.... “பிரிவோம் சந்திப்போம்” படத்தில் ஸ்நேகாவுக்கு அப்பாவா வருவாரே) நல்ல screen presence உடன் இருக்கிறார். அவர் பேசும் “நல்லவனுக்கு தோத்துப்போயிடுவோம் என்கிற பயம் தான் பலவீனம்” என்ற வசனம் சபாஷ். அதுபோல இது சுதந்திர நாடு எங்கே வேணும்னாலும் ஒண்ணுக்கு அடிக்கலாம் என்று வசனம் பேசியவுடன் பாரதியாரின் “ஆடுவோமே பள்ளு பாடுவோமே” என்ற பாடலுடன் ஆரம்பிப்பது கரு. பழனியப்பனின் signature. அடக்கி வாசிக்கும் மணிவண்ணன், Topical-ஆக சிரிக்க வைக்கும் இளவரசு, இளமையான சரண்யா மற்றும் மறைந்த “விஜயன்” ஆகியோர் படத்துக்கு நல்ல துணை. ”என்னை தந்திடுவேன்” பாடலில் வித்யாசாகர் நம்மை நெகிழ்விக்கிறார். இப்படிபட்ட நல்ல கலைஞன் “காவலன்” போன்ற படங்களுக்கு இசையமைக்க வேண்டிய காலக்கொடுமையை நினைத்து ஒரு நிமிடம் பெருமூச்சு விடத்தோன்றுகிறது. ஆறு / ஏழு வருட புராதணம் படத்தில் வரும் பச்சை பல்லவன் பஸ்ஸிலும், CRT Monitor-களிலும் தெரிந்தாலும், கதை சொல்லப்பட்டுள்ள விதம், திவாகரனின் கேமிரா இன்னும் contemporary ஆகவே உள்ளது. நல்ல திரைக்கதைக்கு காலஓட்டத்தால் பாதிப்பில்லை என்பதற்கு “சதுரங்க”த்தை case study-ஆக சொல்லலாம்.

நான் எனது பழைய பதிவுகளில் “எனக்கு பிடித்த கரு. பழனியப்பன்” சொல்லியிருந்தேன் - எனக்கு திரையுலகில் இரண்டு பேரை மட்டுமே பார்க்கவேண்டும் என்ற கனவு - ஒருவர் நமது கரு. பழனியப்பன் மற்றவர் மலையாள இயக்குநர் கமல். இந்த கனவின் ஒரு பகுதி கடந்த மாதம் நிறைவேறியது. மிக யதேச்சையாக கரு. பழனிய்ப்பனை சென்னையில் சரவண பவனில் வைத்து பார்க்க முடிந்தது. அவரிடம் என்னவெல்லாம் சொல்லவேண்டும் என்று கடந்த ஏழு வருடங்களாக நினைத்திருந்தேனோ எல்லாவற்றையும் அவரது reaction-ஐ கூட எதிர்பார்க்காமல் கொட்டி தீர்த்துவிட்டேன். அடுத்த முறை அவரை பார்த்தால் இயல்பாக உரையாட ஆரம்பித்துவிடுவேன் என்று நினைக்கிறேன். அது நடக்குமா என்று தெரியவில்லை. ஆனால அவரை சந்தித்தது - an affair to remember.

Myself with Karu. Palaniappan