பொன்னியின் செல்வனின் penultimate என்று சொல்லக்கூடிய அந்த முக்கிய உச்சக்கட்டங்கள் இந்த ஐந்தாவது பாகத்தில் தான் நடைபெறுகின்றன. நான்கு புத்தகங்களில் வந்த சம்பவங்கள் எல்லாம் இந்த பாகத்தில் வந்து ஒரு புள்ளியில் குவிந்து முழுமை அடைகிறது. கதாபாத்திரங்களின் நடவடிக்கைகளில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என்றபோதும், அவர்களின் நடத்தைகளுக்கு காரணம் கற்பிப்பதாக இந்த பாகம் முடிகிறது. என்ன தான் கற்பனை கதை என்று சொன்னாலும், வரலாற்றை மாற்றுவதாக எழுத முடியாதே. இந்த ஐந்தாம் பாகத்தில் என்ன நடக்கிறது?
நான்காவது பாகத்தில் சம்புவரையர் அரண்மனையில் ஆதித்த கரிகாலன் வந்தபிறகு நந்தினி பெரிய பழுவேட்டரையரை தஞ்சைக்கு சென்று மதுராந்தகத்தேவனை அழைத்துவருமாறு சொல்ல, அவரும் நந்தினியின் கட்டளையை சிரமேற்கொண்டு புறப்பட்டு போகிறார். அதே சமயம் நாகை சூடாமணி விகாரத்திலிருந்து பொன்னியின் செல்வர் வெளிப்படவேண்டியதாகிறது. மீண்டும் புயல் மழையில் மாட்டிக்கொண்டு இளவரசர் தஞ்சையை நோக்கி பயணப்படுகிறார். அதே சமயத்தில் புயலில் மாட்டிக்கொண்டு பழுவேட்டரையரின் பரிவாரம் சிதறிப்போகிறது. அப்போது பெரிய பழுவேட்டரையர் ஒதுங்கிய மண்டபத்தில் சில ராஜ்ஜிய ரகசியங்களை, சதிகளை கேட்க நேரிடுகிறது. அதை தடுப்பதற்குள் சம்புவரையர் மாளிகையில் ஆதித்த கரிகாலன் கொல்லப்படுகிறான். அதே சமயம் தஞ்சையில் சுந்தரசோழரின் உயிருக்கு குறி வைக்க, நடுவில் மந்தாகினி தேவி பாய்ந்து தன் மீது வேலை ஏந்தி உயிர்த்தியாகம் செய்கிறார்.
வந்தியத்தேவன் மீது கொலைப்பழி விழ, ஆனால் மணிமேகலை தான் இளவரசரை கொலை செய்ததாக பழியை ஏற்றுக்கொள்ள முயற்சிக்கிறாள். கரிகாலன் இறந்த செய்தியை கேட்டு அவன் தாத்தா மலையமான் ஆத்திரத்தில் சம்புவரையர் மாளிகையை சூறாடி தீ வைக்கிறார். இந்த குழப்பத்தில் நந்தினியும், மற்ற சதிகாரர்களும் திருக்கோவிலூரை விட்டு வெளியேறிவிடுகின்றனர். சின்ன பழுவேட்டரையர் வந்தியத்தேவனை குற்றவாளிக்கூண்டில் நிறுத்துகிறார். பெரிய பழுவேட்டரையர் தான் நந்தினியை கல்யாணம் செய்து வந்தது தான் இந்த குழப்பங்களுக்கெல்லாம் காரணம் என்று கூறி பிராயச்சித்தமாக உயிரை விடுகிறார்.
இதற்கிடையில் வந்தியத்தேவனுக்கு மதுராந்தகத்தேவர் உண்மையான இளவரசர் அல்ல என்றும், பூக்காரன் சேந்தன் அமுதனே உண்மையான இளவரசன் என்று தெரிய வருகிறது. இதை அறிந்த மதுராந்தகத்தேவன் தான் பாண்டிய குலத்தை சேர்ந்தவன் என்பதால் தனக்கு பாண்டிய ராஜ்ஜியமும், ரத்தின ஹாரமும் கிடைக்கும் என்று நம்பி தப்பி ஓடுகையில் கந்தமாறனின் வேலுக்கு இறையாகிறான். பின்னர் அநிருத்த பிரம்மராயர் இந்த உண்மையை சபையில் போட்டு உடைக்க, வந்தியத்தேவனின் கொலைப்பழியும் அழிக்கப்பட வல்லவரையனுக்கு உரிய மரியாதை அளிக்கப்படுகிறது.
தஞ்சை சிம்மாசனத்துக்கு தகுந்த வாரிசு அருள்மொழி வர்மன் தான் என்று ஏகமனதாக மக்களும், மந்திரிகளும் முடிவுக்கு வந்து பட்டாபிஷேகத்துக்கு நாள் குறிக்கின்றனர். இதற்கிடையில் அருள்மொழிவர்மன் - வானதி திருமணமும், சேந்தன் அமுதன் - பூங்குழலி கல்யாணமும் நடந்துவிடுகிறது. வந்தியத்தேவன் இலங்கை செல்லும் படைக்கு தலைமை தாங்கி செல்கிறான். பட்டாபிஷேகத்து அன்று அருள்மொழி வர்மை நைச்சியமாக மணிமகுடத்தை சேந்தன் அமுதன் தலையில் வைத்து அவனை அரசர் ஆக்கிவிடுகிறார். விழா மண்டபத்தில்ருந்து தந்திரமாக செளியேற்றப்பட்ட சின்ன பழுவேட்டரையர் திரும்பி வந்து (பழைய) மதுராந்தகத்தேவன் உயிரோடு ரவிதாசனின் கூட்டத்தில் கலந்துவிட்டதாகவும், அவருடைய மகள் கணவனுடனேயே சென்றுவிட்டதாகவும், இனி தான் உயிரோடு இருப்பதில் பலன் இல்லை என்று வருந்துகிறார். அவரை சமாதானப்படுத்தி அருள்மொழிவர்மன் மீண்டும் சின்ன காலாந்தகரை தனாதிகாரியாக நியமிக்கிறார்.
ஆதித்த கரிகாலனை கொன்றதாக பழியை ஏற்றுக்கொள்ளும் மணிமேகலை சித்தப்பிரமை பிடித்து கடைசியில் வந்தியத்தேவனின் மடியில் உயிரை விடுவதாக இந்த பெரும் புதினம் முடிவடைகிறது. அதற்கு பிறகு பின் குறிப்பாக கல்கி பல வரலாற்று தகவல்களை முன்வைத்து சோழ சாம்ராஜ்ஜியத்தின் புகழை விளக்குவதாக முடிகிறது.
To be really honest, இந்த பாகத்தில் தான் இதன் ”voluminous"-ஐ உணர்ந்தேன். காரணம் - இதன் முக்கிய நிகழ்வுகளான சுந்தரசோழர் கொலை முயற்சி, ஆதித்த கரிகாலனின் கொலை ஆகியவை கிட்டத்தட்ட முதல் 30%-ல் முடிந்துவிடுகிறது. அதற்கப்புறம் முன்பு இருந்த அளவுக்கு விறுவிறுப்பு இல்லாதது போல ஒரு உணர்வு. அடுத்து கரிகாலனின் கொலையை பற்றி முக்கிய கதாபாத்திரங்கள் பெரிதாக அலட்டிக்கொள்ளாததாக அமைந்திருப்பது கொஞ்சம் சப்பென்று இருக்கிறது. மணிமேகலையின் கதாபாத்திரம் ஒரு தேவையற்ற இடைச்செருகல். அதனாலோ என்னவோ கதை நகர நகர ஒருவித பொறுமையின்மை தொற்றிக்கொள்கிறது. ”இவ்ளோ படிச்சாச்சு, இன்னும் இதையும் முடிச்சுடுவோமே” என்று தான் தோன்றுகிறது. இது ஒரு சிறிய குறை தான். This shouldn't take away the sheen of this historical.
இதை படித்து முடிக்கும்போது ஒரு சந்தோஷமான செய்தி வந்தது - மணிரத்னத்தின் “பொன்னியின் செல்வன்” கைவிடப்பட்டுவிட்டதாம். ஒருவேளை எனது பிரார்த்தனைகளுக்கு கடவுள் செவிசாய்த்துவிட்டாரோ என்று தோன்றியது. இது ஒரு jinxed novel என்று தோன்றினாலும் பரவாயில்லை ஆனால் இதில் யாரும் கை வைக்காமல் இருந்தாலே அதுவே அவர்கள் கல்கி கிருஷ்ணமூர்த்திக்கும், இந்த நாவலுக்கு செய்யும் மிகப்பெரிய மரியாதையாக இருக்கும்.
இம்முறை இந்த நாவலை முழுவதுமாக எனது Kindle-ல் படித்ததால் அந்த e-book reader சாபல்யம் அடைந்தது. இந்த பொன்னியின் செல்வனை சில வருடங்களுக்கு பிறகு நான்காம் முறை படிக்கும் போதும் இம்முறை அனுபவித்த அதே பரவசங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் மூடி வைத்தேன். எழுத்தாளினி அனுஷா வெங்கடேஷ் இதற்கு தொடர்ச்சியாக “காவிரியின் மைந்தன்” என்றொரு நாவல் எழுதியிருக்கிறார். அதை படிக்க ஆரம்பிக்க வேண்டும். பாலகுமாரன் தனது “கடிகை” நாவலில் ரவிதாசன், நந்தினி ஆகியோரின் பார்வையில் ஒரு கதையை எழுதியிருக்கிறார். அதையும் ஒரு முறை படிக்கவேண்டும். கல்கி என்னை விட்டாலும், சோழர்கள் அவ்வளவு சீக்கிரமாக என்னை விடுவதில்லை போல.
{oshits} வாசகர்கள் எனது இந்த பொன்னியின் செல்வன் பயணத்தில் பங்கெடுத்துள்ளனர்!!!