Nature
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கொடிவேரி அணைநம்மவர்கள் திரைப்படங்களில் வரும் நடிகர்களை மட்டுமல்ல, படத்தில் வரும் Location-களை கூட கொண்டாடுகிறார்கள் என்பது புதிதான விஷயமல்ல. ஆனால் atleast அந்த காரணத்தினால் நம்மவர்கள் பல இடங்களுக்கு சென்ரு வருவது நல்ல விஷயம். அதனால் நான் அதை குறித்து புகார் வாசிக்கப்போவதில்லை. சமீபத்தில் நாங்கள் கோபிச்செட்டிப்பாளையத்தை அடுத்துள்ள கொடிவேரி அணைக்கு போன அனுபவம் தான் இது. ஏதோ Plan செய்து, அது நடக்காமல், எதிர்பாராத விதமாக கடந்த ஞாயிற்றுக்கிழமையில் கொடிவேரி அணையில் கால் பதித்தோம் - எனது சகோதரர் அமிர்தராஜ் உபயத்தில்.

ரொம்ப நாட்களாக நான் அதை ‘கொடிவேலி’ என்று தான் நினைத்துக் கொண்டிருந்தேன். பல படங்களில் பாடல் காட்சிகளில் பார்த்திருந்ததால் ‘இது தான் கொடிவேலி’ என்று ஒரு பரிச்சயம் இருந்தது. மேலும் எனது கல்லூரித்தோழன் ’கோபி சீயான்’ குருமூர்த்தி என்னையும், பிரீதா சேச்சியையும் கல்லூரி சமயத்தில் கொடிவேலிக்கு அழைத்துச்செல்வதாக சொன்னதோடு சரி. அது நடக்கவில்லை. பின்னர் நாங்கள் வெவ்வேறு ஊர்களில் பிழைப்புக்காக பிரிந்துபோனது வேறு கதை. பின் ஏனோ எனக்கு கோபிச்செட்டிப்பாளையம் பகுதியில் சுற்றுலா செல்லவேண்டும் என்று தோன்றியதில்லை. ஒருவேளை அந்த இடங்களை பற்றிய அறியாமையாக கூட இருக்கலாம்.

மேட்டூரிலிருந்து அந்தியூர், கோபிச்செட்டிப்பாளையம் வழியாக கொடிவேரியை அடைந்தது ஒரு நல்ல பயணம். வழியில் ஒரு இடத்தில் “இங்கு தான் உழவன் மகன் படத்து பாடலை எடுத்திருந்தார்கள்”, “சின்னத்தம்பி படத்தில் பிரபுவின் வீடு வருமே, அந்த இடம் தான் கொடிவேரி” என்ற பல உபரித்தகவல்களுடனே பயணம் செய்து ஒரு இனிய மாலையில் கொடிவேரியில் சென்று இறங்கினோம்.

பின்னர் Google-ல் தேடியபோது அது மைசூர் ராஜாவால் கட்டப்பட்ட நீர்த்தேக்கம் என்றும், அது கோபிச்செட்டிப்பாளையம் பகுதியில் விவசாயத்துக்கு வாழ்வாதாரம் என்றும், காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அந்த இடத்தை சுற்றுலாத்தலமாக உருவாக்கவேண்டும் என்று வலியுறுத்தியது பல்வேறு காலக்கட்டங்களில் இந்த இடத்தை மையமாக வைத்து நடந்த நிகழ்வுகள் என்று தெரிந்துக்கொண்டேன். இப்போது அணைக்கட்டு பகுதிக்குள் பிரவேசிக்க ஒருவருக்கு ரூ. 4/- வீதம் நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் அணைக்கட்டுக்குள்ளே நீர்நிலையை பார்த்தபடி ஒரு சிறுவர் பூங்காவும், முனியப்பன் கோவிலும் உள்ளது.

நாங்கள் சென்றது கோடையின் ஆரம்பமாதலால் கொடிவேரி நீர்த்தேக்கத்தில் தண்ணீர் வரத்து தாராளமாக இருந்தபோதும், தண்ணீர் பாய்ச்சல் மிக வேகமாக இல்லாமல் மிதமாக இருந்தது. பலமுறை முன்பே சொன்னது போல நான் ஒரு hydrophile - சரியான நீர்நிலை விரும்பி. அதுவும் இயற்கையான சூழலில், கூட்டம் குறைவாக / ஆள் நடமாட்டமே இல்லாத ஒரு நீர்நிலையை கண்டுவிட்டால் என்னை விட சந்தோஷமானவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். நாங்கள் சென்றது ஒரு மாலை வேளை என்பதால் அன்று கூட்டம் குறைவு. நீர்த்தேக்கத்தின் மீது சிலர் நடந்து சென்றும், நடுவில் குளித்துக்கொண்டும் இருந்ததை பார்த்ததும் எனக்கும் நீரில் இறங்கவேண்டும் என்று கால்கள் பரபரத்தது.

நான், அகிலா, புட்டு மற்றும் குட்டிப்பெண் ஹர்ஷிதா ஆகியோர் முதலில் தண்ணீரில் நடக்க ஆரம்பித்துவிட்டோம். பின்னர் அமிர்தராஜும், லாவண்யாவும் எங்களோடு சேர்ந்துக்கொண்டனர். நீர்த்தேக்கத்தை கடக்க பரிசில்களும் வாடகைக்கு கிடைக்கின்றன. (கொஞ்சம் விட்டால் பரிசில்காரர்கள் நம் கையை பிடித்து இழுத்துச் சென்றுவிடுவார்கள்) இருந்தாலும் முழங்கால் வரை பேண்ட்டை சுருட்டிவிட்டுக்கொண்டு நடக்க ஆரம்பித்தோம். கொஞ்ச நேரத்தில் அந்த தண்ணீரில் புட்டுவையும் நடக்கவிட்டுவிட்டோம். மாலை வெயில், கால்களை மெதுவாக வருடும் நீரலைகளில் நடந்து செல்வது ஒரு சொல்லிற்கினிய அனுபவம். அடுத்த கரைக்கு சென்று கொஞ்ச நேரம் இளைப்பாறிவிட்டு (அப்படியே ‘சின்னத்தம்பி’யின் வீட்டையும் பார்த்துவிட்டு) மீண்டும் நடந்து வந்தோம். நடுவில் நின்று சில புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டோம்.

அப்போது எதிரில் பரிசிலில் ஒரு கும்பல் ஆற்றை கடந்துக்கொண்டிருந்தது. நாங்கள், புட்டு உட்பட, மெதுவாக உல்லாச நடைபோட்டுக்கொண்டு ஆற்றின் குறுக்கே நடந்துக்கொண்டிருந்தோம். அப்போது பரிசிலில் ஒருவர் “இங்கே பார், குழந்தை எல்லாம் இந்த ஆற்றை நடந்து கடக்குது... நாம பரிசில்ல போயிட்டு இருக்கோம்’ என்று ஆதங்கப்பட்டுக்கொண்டதை கேட்டு சிரித்துக்கொண்டோம். அங்கே தான் இந்த 2011 வருடத்தின் ’முதல் நுங்கு’ சாப்பிட நேர்ந்தது. மீண்டும் கொடிவேரிக்கு வரவேண்டும் - இது போல relaxed-ஆக, இந்த சூழலை ரசிக்கும் நண்பர்களோடு குறிப்பாக புட்டுவோடு. இப்போதெல்லாம் புட்டு இயற்கையை மிகவும் ரசிக்க கற்றுக்கொண்டுவிட்டான். எனக்கு ஊர் சுற்ற இனிமேல் வெளியில் துணை தேடவேண்டிய அவசியம் இருக்காது என்று நினைக்கிறேன்.



திரும்ப வரும் வழியில் பாரியூர் கொண்டத்து காளியம்மன் என்ற கோவிலுக்கு சென்றோம். இந்த பகுதியில் மக்கள் நம்பிக்கையோடு வழிப்படும் சக்திவாய்ந்த அம்மன் கோவில் என்ரு தெரிந்தது. ஆனால் எனக்கு இந்த கோவில் பிடித்துபோனதற்கு காரணங்கள் வேறு. ஒன்று - மிக அழகாக, சுத்தமாக பராமரிக்கப்பட்ட ஒரு சில கோவில்களில் இது ஒன்று. இரண்டாவது - இதில் உள்ள சிற்பங்கள் மற்றும் கோவில் சுவற்ரில் மேலே வைக்கப்பட்டுள்ள சிமெண்ட் பொம்மைகள்.

சமீப காலங்களில், அதாவது contemporary style-ல் கட்டப்பட்ட கோவில்களில் மிக அழகான, அதிகமான மற்றும் வித்தியாசமான சிற்பவேலைப்பாடு கொண்ட தமிழக கோவில் இது தான் என்று ஆணித்தரமாக சொல்லலாம். Contemporary style-க்கு உதாரணம் சொல்லவேண்டும் என்றால்.... பழங்காலத்தில் கட்டப்பட்ட கோவில்களில் உள்ள பெண் / அம்மன் சிலைகள் எல்லாம் topless-ஆக, திறந்த மார்பை நகைகள் மட்டும் கொண்டு மறைத்து, அந்த காலத்தில் இருந்தபடி அமைக்கப்பட்டிருக்கும். கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் தான், குறிப்பாக ரவிவர்மர் வரைந்த ஓவியங்களில் இருந்து தான் அம்மன் /பெண் தெய்வங்கள் எல்லாம் மிக நேர்த்தியாக புடவை, பிளவுஸ் அணிந்து பக்காவாக fleets எல்லாம் வைத்து modern-ஆக calendar-களில் தொங்க ஆரம்பித்துள்ளன. பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் உள்ள தூண்களில் பெண் தெய்வங்கள் எல்லாம் fleets வைத்த பட்டுப்புடவையுடனும், modern-ஆக காட்சியளிக்கின்றனர். குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் - மகிஷாசுரமர்த்தினி சிலை.

மேலும் இங்கே தான் கோவில் தூணில் - காந்தீஜி, நேரு, ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர் என சமீபத்திய காலத்து மனித தெய்வங்களும், ஆதி சங்கரர், ராமானுஜர் போன்ற ஆன்மீக தலைவர்களுடைய சிலைகளும் அமையப்பெற்றுள்ளன. நாங்கள் சென்றது இரவு 7:30 மணியளவில் என்பதால் என்னுடைய mobile phone camera-வில் தெளிவாக எடுக்க முடியவில்லை. இவற்றை படம்பிடிக்கவேணும் மீண்டும் ஒருமுறை இந்த காளியம்மன் கோவிலுக்கு வரவேண்டும்.

இதை அடுத்து ஒரு முருகர் கோவிலும், பெருமாள் கோவிலும் உள்ளன. இதில் முருகர் கோவிலின் உட்புறம் முழுவது வெள்ளை நிற சலவைக்கல்லில் செய்ய்ப்பட்டுள்ளது. அங்கே உள்ள பெயர்பலகையில் இந்த (மூன்று) கோவில்களும் கவுண்டர் சமூகத்தால் 200 வருடங்களுக்கு மேலாக பராமரிக்கப்பட்டு வருவதாக அறிந்தோம். நேரமின்மை காரணத்தால் பெருமாள் கோவிலை பார்க்க முடியவில்லை.

மீண்டும் ஒரு முறையேனும் கோபிச்செட்டிப்பாளையத்துக்கு வந்து இதன் சுற்றுப்புறங்களில் உள்ள அழகை எல்லாம் ரசிக்கவேண்டும். இந்த மொக்கை project-ல் இருந்து வெளியே வந்ததும், முடிந்தால் அடுத்த கம்பெனிக்கு மாறும் இடைவெளியில் இந்த பகுதியில் ஒரு சுற்றுலா போடவேண்டும். அது நடக்கும் வரை நம்பிக்கையோடு காத்திருக்கத்தான் வேண்டும்.

{oshits} வாசகர்கள் இந்த பதிவைப் படித்துள்ளனர்.