Architecture
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

Tanjore Temple - Click the image to read furtherஎனது ”புது வருஷ ஆசை” பதிவில் இந்த வருஷமேனும் தஞ்சாவூர் கோவிலுக்கு போய்விட்டு வரவேண்டும் என்று சொல்லியிருந்தேன் அல்லவா? கடந்த வருடம் 5 முறைகள் டிக்கெட் புக் செய்துவிட்டு கடைசி நேரத்தில் கேன்ஸல் செய்யவேண்டியிருந்தது. கடைசி முறை கிளம்பும் அன்று பயங்கர ஜுரம் வந்து டிக்கெட்டை கேன்ஸல் கூட செய்யமுடியாமல் தஞ்சை எனக்கு டேக்கா கொடுத்துக்கொண்டிருந்தது. எனது தஞ்சை நண்பனிடம் “இனிமேல் தஞ்சைக்கு எப்போது வருவேன் என்று தெரியவில்லை” என்று சொல்லி மனது விட்டுவிட்டேன். ஆனால் நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்குமாம். திடீரென்று கடந்த வியாழக்கிழமை குடும்பத்தோடு தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலுக்கு போக நேர்ந்தது. ஒருவேளை குடும்பத்தோடு தான் நான் வரவேண்டும் என்று கடந்த வருடம் என்னை பெருவுடையார் தன்னை பார்க்க வரவிடாமல் செய்தாரோ என்னவோ ?

சோழன் எக்ஸ்பிரஸ் புண்ணியத்தில் மாலை 3:15 மணிக்கு தஞ்சையில் இறங்கினோம். கோவிலுக்குள் நுழைந்த நேரம் மெல்ல மெல்ல மாலை புலர்ந்துக்கொண்டு இருந்தது. கடந்த முறை அத்தனை கூர்மையாக பார்த்தும் சில வெளிவாசல் கோபுர சிற்பங்களை கவனிக்க தவறியிருந்திருக்கிறேன். உதாரணம் - குளிக்கும் கோபிகைகளின் ஆடைகளை தூக்கிக்கொண்டு மரத்தில் விளையாடும் கண்ணன், இரணியனை வதைக்கும் நரசிம்மர் ஆகிய சிற்பங்கள்.

மேலும் வெளி மதில்சுவரில் உபயோகப்படுத்தப்பட்டுள்ள கற் பலகைகளில் ஏன் protrusion வைத்து கட்டியுள்ளார்கள் என்று உங்களில் யாருக்காவது தெரிந்தால் பின்னூட்டமிடவும்.

கடந்த முறை வந்தபோது வெளிப்பிரகாரத்தில் உள்ள கிட்டத்தட்ட எல்லா தஞ்சை ஓவியங்களையும் புகைப்படமெடுத்துவிட்டேன். ஆனால் இம்முறை புதிதாக “தகவல் நிலையம்” ஒன்று உருவாக்கி கோவில் பற்றிய சில அரிய தகவல்களை பார்வைக்கு வைத்துள்ளனர். அதில் பழங்காலத்து original சுவரோவியங்கள் (murals) எல்லாம் வைத்திருந்தார்கள். சித்தன்னவாசல் பாணியில் இருந்தன அவை.

அப்புறம் கடந்த முறை கவனிக்காமல் விட்ட ஒரு சுவாரசியமான பொருள் - ஒற்றை கல்லில் குடையப்பட்ட தண்ணீர் தொட்டி. கிட்டத்தட்ட eclairs choclate போன்ற வடிவத்தில் குறுகிய வாய்த்துவாரத்துடன்... எப்படி தான் உள்பக்கத்தில் அத்தனை நேர்த்தியாக குடைந்தார்களோ என்னவோ? அப்புறம் அம்மன் சன்னிதியில் பார்த்த கல்தொட்டி என்னை பிரமிப்பூட்டியது. நான்கு சிங்கங்கள் தூண்களாக, சதுரமான வடிவத்தில் செதுக்கப்பட்ட கல்தொட்டி ஒரு சிற்ப அற்புதம் என்றே சொல்லவேண்டும்.



மகாபலிபுரம் பகுதியில் கருங்கற்கள் கிடைத்ததால் அங்கே ஒரே பாறையில் செய்யப்பட்ட பிரம்மாண்ட சிற்பங்களை காணலாம். ஒரே கல்லில் குடையப்பட்ட பெரிய ரதங்கள், அர்ஜுனன் தவம் எல்லாம் அங்கே அற்புதம் என்றால், தஞ்சை பகுதியில் கருங்கற்கலே கிடையாது. அதனால் கிடைத்த கருங்கற்கலை எல்லாம் வீணடிக்காமல் உபயோகப்படுத்தவேண்டிய கட்டாயம். அதனால் ஒரே சிலை 4-6 பகுதிகளாக செய்யப்பட்டு assemble செய்ப்பட்டிருப்பதை காணலாம். அதற்கும் ஒரு தனி திறமை வேண்டும். அது சோழ சிற்பிகளுக்கு நிறைய இருந்திருக்கிறது.

மாலை வேளையில் வந்ததால், வெயிலின் தாக்கம் இல்லாததால், கோவில் முழுக்க புட்டு நிறைய நடந்தான். மேலும் அவன் கொஞ்சம் claustrophic. குறுகலான இடத்தில் (வீடு, அறை) இருந்தால் ஒரு மாதிரி restless-ஆக இருப்பான். ஆனால் அவ்வளவு பரந்து விரிந்த கோவில் பிரகாரத்தில் சந்தோஷமாக ஓடிக்கொண்டு இருந்தான். அவனை அவ்வளவு சந்தோஷமாக பார்ப்பதே ஒரு சந்தோஷம் தான். மேலும் எனது ex-flame மோகனும் வந்திருந்தான். அவன் கையை கோர்த்துக்கொண்டு மீண்டும் கல்லூரி நாட்களுக்கு போய்விட்டது போல ஒரு பிரமை.

Aadhi praying to God

மொத்தத்தில் இந்த திடீர் தஞ்சை பயணம் ஒரு அழகான அனுபவமாக மாறிவிட்டது அந்த தஞ்சை பெருவுடையாரின் கருணை என்றே நினைக்கிறேன். ஒரு முக்கியமான முடிவு எடுப்பதற்கு முன்பு அவரை தரிசிக்க வேண்டும் என்று முன்பு முயன்றேன். ஆனால் அன்று மாலை வேளை பூஜையை பார்த்தபோது அது ஒன்றுமே நினைவுக்கு வரவில்லை. மாறாக ஒரு பரவசமே மனதில் நின்றது.

கடைசி முறை தஞ்சை பயணம் தடைபட்ட பிறகு ஏனோ தாடி வளர்த்துக்கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட 1 மாதத்துக்கு பிறகு தஞ்சை கோவிலுக்கு போய்விட்டு வந்தப்புறம் தான் தாடியை எடுத்தேன். எங்களின் இனிமையான தருணங்களை உங்களுடன் பகிர்ந்துக்கொள்வதில் சந்தோஷம்.

Aadhi saying something about the compound

{oshits} வாசகர்கள் இந்த தஞ்சை பதிவை படித்துள்ளனர்.