Tamil
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

Endhiran

நான் சில மறந்துபோன காரணங்களுக்காக 'தளபதி'க்கு பிறகு ரஜினியின் படங்களை தியேட்டரில் பார்ப்பதில்லை என்று வைத்திருந்தேன். ஆனால் 'படையப்பா' வெளியானபோது எனது கல்லூரியின் கடைசி வருஷத்தில் இருந்தேன். எனவே நண்பர்களோடு கடைசி படமாக இருப்பதால் எனது கொள்கையை தளர்த்திக்கொண்டு சேலம் கே.எஸ் தியேட்டரில் நண்பர் குழாமோடு போனேன். படத்தில் ரஜினி அறிமுகமாகும் காட்சியில் படத்தை விட தியேட்டரில் இருந்த 'Mass Hysteria'வை மிகவும் ரசித்தேன். அதனால் நல்ல மசாலா படங்களை தியேட்டரில் பார்ப்பதில் எந்த தவறும் இல்லை என்ற மனநிலைக்கு வந்தேன். முத்து, சந்திரமுகி, குசேலன் ஆகிய (நல்ல) மலையாள படங்களின் மோசமான தமிழ் தழுவல்களை பார்க்கவே தவிர்த்து விட்டதால், அடுத்ததாக தியேட்டரில் பார்த்தது 'சிவாஜி'. மாயாஜாலில் படம் வெளியான இரண்டாவது நாளில் CTS கும்பாலோடு பார்த்தபோது IT இதயத்துக்குள்ளே உறங்கி கிடந்த தரை டிக்கெட்டுகள் தியேட்டரில் இறங்கி ஆடிய ஆட்டத்தை பார்த்தபோது எனக்கும் கால்கள் தானாக ஆட்டம் போட துவங்கின. 'எந்திரன்' வெளியானபோது நான் லண்டனில் இருந்தேன். சரி! ஊருக்கு சென்று சேலத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன். ஆனால் 'எந்திரன்' நாங்கள் பெங்களூரூவில் குடியேறிய பிறகு பார்த்த முதல் தமிழ் படமாக, பூட்டு சிங் வாழ்க்கையில் பார்த்த முதல் திரைப்படமாக மாறிவிட்டது.

 

படத்தை பற்றி ஆயிரம் விமர்சனங்கள் படித்துவிட்ட போதும், படம் பார்க்க போனபோது மனது புதியதாக எதிர்பார்த்து போனது. நான் படத்தை பற்றிய விமர்சனமெல்லாம் எழுதப்போவதில்லை. வெறும் எனது அனுபவங்களை மாத்திரம் பகிர்ந்துக்கொள்கிறேன். ரஜினி இருந்தால் ஒரு 10 பேரை உடைத்து பறக்கவிடு, புழுதி பறக்க கதாநாயகனை அறிமுகம் செய்தால் தான் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற இயக்குனர்களின் சால்ஜாப்பை பொய்ப்பது போல மிக இயல்பாக ரஜினியை அறிமுகம் செய்வதிலேயே ஷங்கர் வித்தியாசப்படுத்துக்கிறார். சொல்லப்போனால் ஐஸ்வர்யாவுக்கு தான் அறிமுக காட்சியில் இரண்டு எக்ஸ்ட்ரா ஷாட்டுகள் வைத்திருக்கிறார். ரஜினியை ஒரு கதாபாத்திரமாக படத்தில் நுழைத்ததிலேயே ஷங்கர் தான் நம்புவது கதையை என்று சொல்லாமல் சொல்லிவிடுகிறார்.

படம் முழுக்க நிறைய டெக்னிக்கல் சமாச்சாரங்கள் தூவப்பட்டு இருக்கின்றன. விஷயம் தெரிந்தவர்கள் ரசிக்கலாம். அதற்காக விஷயம் தெரியாதவர்களை உறுத்தவில்லை. நான் என் அம்மாவிடம் படம் ஓடும்போது கேட்டேன் - "ரொம்ப Hi-Fiயா குழப்புறாங்களா?" என்று. அதற்கு என் அம்மா அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்று தனக்கு புரிந்ததை சொன்னார். உதாரணம் - சிட்டி முதல் முதலில் 'Hello World' என்று பேச ஆரம்பிக்கும். கணினியில் புரோகிராம் எழுதும் அனைவரும் தங்கள் முதல் புரோகிராம் 'Hello World' என்பதை கணினியில் வரவைப்பதாக எழுதுவார்கள். இது விஷயம் புரிந்தவர்களுக்கு ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தும். சிட்டி தான் குழந்தைத்தனமான பதில்களால் சந்தானம் மற்றும் கருணாசுக்கு வேலை வைக்காமல் தானே செய்துவிடும் காமெடிகள் அறிவுப்பூர்வமான சிரிப்புக்கு உத்திரவாதம். முதல் பாதி முழுதும் பின் பகுதிக்கான களத்தை உருவாக்குவதிலேயே சுவாரசியமாக போகிறது. சொல்லப்போனால் பின் பகுதியில் எடிட்டர் கொஞ்சம் தாராளமாகவே கத்திரி போட்டிருக்கலாம். குறிப்பாக ரஜினி - ஐஸ் romance காட்சியும், 'கிளிமாஞ்சாரோ' பாடலும் அலுப்பூட்டுகிறது. சூழ்நிலைக்கேற்ப வந்தாலும் ' இரும்பிலே இதயம் மூளைக்குதே' பாடல் கூட கொஞ்சம் தொய்வை உணர வைக்கிறது. ஆனால் 'அரிமா அரிமா' பாடல் செம கம்பீரம்.

ஐஸ்வர்யா ராய் - படம் முழுக்க வந்து ரஜினியின் பல வருட கனவை பலிக்க வைத்திருக்கிறார். அவருக்கு மிகப் பிரமாதமான கதாபாத்திரம் என்றெல்லாம் சொல்ல முடியாது. இருப்பினும் இவ்வளவு பெரிய படத்தில், ரஜினிக்கு ஈடுகொடுக்கும் Screen Presence ஐஸ்வர்யாவை தவிர வேறு எந்த நடிகைக்கும் இருக்குமா என்பது சந்தேகமே. குளோசப் காட்சிகளில் மேக்கப்பையும் மீறி கொஞ்சம் முதிர்ச்சி எட்டிப்பார்த்தாலும் Long/Mid ஷாட்டுகளில் அம்மிணி இன்னும் தேவதை தான். அதுபோல தான் 'வில்லன்' Danny Denzongpa-வும். 4-5 காட்சிகளில் மட்டுமே வந்தாலும் ஒருவித Stern பார்வையில் அதிகம் பேசாமல் (அவரது வசனங்களை ஹிந்தியில் பேசியிருக்கிறார்) தனது Body Language-லேயே அந்த பொறாமையை வெளிப்படுத்தியிருப்பது அழகு. டேனி அந்த கால ஜான் ஆபிரகாம் (உடை அணிய பிடிக்காத நடிகர்) என்பது கொசுறு செய்தி.

இரண்டாம் பாதியில் ஏற்படுத்திய தொய்வை க்ளைமேக்ஸ் மொத்தமாக ஈடுகட்டிவிடுகிறது. Version 2.0 சிட்டி தன்னை தானே பெருக்கிக்கொண்டு தனி சாம்ராஜ்ஜியம் அமைத்து ஐஸ்வர்யாவை கடத்திக்கொண்டு போய்விட அவரை மீட்க வசீகரன் செய்யும் முயற்சிகள் Hi-Fi என்றபோதும் Self Multiplying, Matrix formation concepts புரிந்தவர்களுக்கு ஒருவித அனுபவம் என்றால் அதை பற்றி தெரியாத ரசிகர்களுக்கு கூட அந்த காட்சிகள் பிரமிப்பை கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Endhiranநாங்கள் இந்த படத்துக்கு கிளம்பும்போது என் அம்மா "தியேட்டரில் குழந்தை அழுது கொண்டிருப்பான். எனவே நீயும் அகிலாவும் போய்விட்டு வாருங்கள். நான் வீட்டில் புட்டுவோடு இருக்கிறேன்" என்று சொன்னார். ஆனால் நாங்கள் ஒருவேளை குழந்தை அழுதால் ஆள் மாற்றி ஆள் சமாளித்துக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டு சென்றோம். ஆனால் புட்டூ படம் ஆரம்பித்ததும் திரையில் கண்ணை பதித்தவன் தான்.. கடைசியில் தூங்கினானே ஒழிய அவன் விழித்திருந்த வரை படத்தை அவ்வளவு அமைதியாக ரசித்து பார்த்தான். அவ்வப்போது என்னிடமும் அகிலாவிடமும் அவனுடைய பாஷையில் ஏதோ சொல்ல முயன்றுக்கொண்டிருந்தான். 'எந்திரன்' கொடுத்த பிரமிப்பை விட எனக்கு புட்டூ படத்தை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தது தான் சந்தோஷமாக இருந்தது. புட்டூவை முதன் முதலில் ஒரு நல்ல படத்துக்கு அழைத்து சென்றது சந்தோஷம். அதனால் தான் எனக்கு ஏந்திரன் பார்த்தது ஒரு மந்திர அனுபவமாக இருந்தது.

இருப்பினும் ஒரு வருத்தம்.. படத்தை தமிழ்நாட்டில் பார்க்கவில்லை என்பது தான். காறணம் இங்கே பெங்களூரு மல்டிப்ளெக்ஸில் மக்கள் அநியாயத்துக்கு decent-க படம் பார்த்தார்கள். தமிழகத்தில் பார்த்திருந்தால் அந்த அரவாரத்தை, Mass hysteria-வையும் சேர்த்து ரசித்திருந்தால் அது இன்னும் சுவை கூடிய அனுபவமாக இருந்திருக்கும்