Relationships
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

{mosimage}

பாரதியாரின் பாடல் ஒன்று நினைவுக்கு வர, அதன் மூலம் ‘inspire' ஆகி எழுதியது தான் இந்த பதிவு. அந்த பாடல் இப்படி ஆரம்பிக்கிறது... ‘எங்கிருந்தோ வந்தான்.. இடைச்சாதி நான் என்றான்.. இங்கிவனை நான் பெறவே... என்ன தவம் செய்துவிட்டேன்”. கண்ணன் ஒரு பெரிய குடும்பம் இருக்கும் வீட்டுக்கு உதவியாளராக வந்து எல்லோருக்கும் தேவையான பணிவிடைகளை செய்வதாகவும், ஆனால் கண்ணன் எங்கிருந்து வந்தான் என்பது வீட்டிலுள்ளவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. நமது வாழ்க்கையிலும் சில அவசியமான நேரங்களில் நாமே எதிர்பாராத வகையில் கண்ணன் போல சிலர் திடீரென்று தோன்றி நமக்கு உதவி செய்துவிட்டு வேலை முடிந்தவுடன் காணாமல் போய்விடுவது உண்டு. சமீபத்தில் என் வாழ்க்கையில் அப்படி எங்கிருந்தோ வந்து உதவி செய்த சில நல்ல உள்ளங்களை பற்றியது தான் இந்த பதிவு.

Page 1

திரு. கணேஷ்:- முன்பே பலர் உதவியிருக்கிறார்கள் எனினும் என் நினைவில் முதலில் வருவது திரு. கணேஷ். நான் 10வது படித்துக் கொண்டிருந்தபோது ஹிந்தியில் விஷாரத் உத்தரார்த் முடித்துவிட்டேன். அந்த சான்றிதழை சென்னையில் இருக்கும் தக்ஷின பாரத ஹிந்தி பிரசார சபாவில் நடக்கும் convocation-இல் தான் வாங்கவேண்டும். Convocation நடந்தது ஒரு வார நாள் ஆதலால் ஏதோ அவசியமான காரியத்தால் என் அப்பா கூட வருவதற்கு ரொம்ப முடியாத சூழ்நிலை. அப்போது நான் சென்னைக்கு போனது இல்லை. சான்றிதழ் வாங்க என் உடன் படித்த ஒரு பையனும் அவனுக்கு தெரிந்த ஒரு பெண்ணும் என கிளம்புவதாக திட்டம். பஸ் ஸ்டாண்டில் இன்னும் இரு (+1, +2 படிக்கும்) பெண்கள் சேர்ந்துக்கொள்ள ஏதோ தைரியத்தில் நாங்கள் எல்லாம் தனியாக கிளம்புவதாக ஏறிக்கொண்டோம். அப்போது திரு. கணேஷ் எங்களிடம் ‘எல்லோரும் எங்கே போகிறீர்கள்?’ என்று கேட்டார். நாங்கள் ‘ஹிந்தி பிரசார சபாவுக்கு போகிறோம்’ என்றோம். அவர் ‘போக வழி தெரியுமா?’ என்று கேட்டார். நாங்களும் ஏதோ எங்களுக்கு சொல்லப்பட்ட பஸ் நம்பரை சொன்னோம். கணேஷ் எங்களை சென்னையில் சபாவுக்கு அழைத்து சென்று, சான்றிதழ்களை வாங்க வைத்து, பிராட்வேயில் மதியம் உணவருந்தவைத்து பத்திரமாக திரும்ப கடலூர் பஸ் ஸ்டாண்டு வரை கொண்டு சேர்த்தார். என்ன காரணத்துக்காக அவர் சென்னை கிளம்பினாரோ அந்த வேலையை தொலைபேசி மூலமாவது முடித்தாரா இல்லையா என்று தெரியவில்லை. என்னோடு வந்த மாணவனின் தந்தையிடம் தமிழ் படித்திருந்தாராம். அந்த ஒரே நன்றிக்காக எங்களை கருத்தாக பார்த்துக்கொண்டது அவரது பெருந்தன்மை. சில மாதங்களுக்கு பிறகு எங்கள் தெரிந்தவர்களின் வீட்டுக்கு போனபோது அவர்களது பெண்ணுக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை என்று ஒரு போட்டோவை காட்டினார்கள். ஆச்சரியம்!!! அது திரு கணேஷின் புகைப்படம். ‘உங்கள் பெண்ணுக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை ரொம்ப நல்லவர்’ என்று மனமார சொன்னேன். அவர்கள் வீட்டில் திரு கணேஷை மீண்டும் ஒரு முறை பார்க்க நேர்ந்தது. அவர் தான் செய்த உதவியை பெரிதாக காட்டிக்கொள்ளவில்லை. பின்னர் அந்த குடும்பம் வேறெங்கோ மாறிவிட்டார்கள், எனவே கணேஷ் வெறுமனே நினைவாக சுருங்கிவிட்டார்.

திரு. பிரபுஷங்கர்:- மூன்று வருடங்களுக்கு முன்பு... நான் IT-யில் வேலை தேடிக்கொண்டிருந்த சமயம். SAP Certification முடித்துவிட்டு அபுதாபியில் வேலை தேடிக்கொள்ளலாம் என்று கிளம்பிவிட்டேன். இங்கேயே இருந்த என் நண்பர்கள் எல்லாம் Accenture-ல் கும்பலாக வேலைக்கு சேர்ந்துவிட்டார்கள். மூன்று மாதங்களுக்கு பிறகு அபுதாபியில் SAP வேலை கிடைக்க வழி இல்லை என்று தெரிந்தபிறகு இந்தியாவுக்கு வந்துவிட்டேன். வந்து பல நேர்முகத்தேர்வுகள் attend செய்துவிட்டு, கடைசியில் Accenture-ல் வாய்மொழியாக வேலைக்கான உத்தரவை கொடுத்துவிட்டார்கள். பின்பு 2 மாதங்கள் இழுத்தடித்துவிட்டு ‘இப்போது வேலை காலி இல்லை, புதிதாக தேவைகள் வரும்போது உங்களை தொடர்புகொள்கிறோம்’ என்று ஒரு இடியை சர்வ சாதாரணமாக மின்னஞ்சலில் அனுப்பி இருந்தார்கள். SAP Certification முடித்து 9 மாதங்கள் ஆகிவிட்டன. நேர்முகத்தேர்வுகள் அனைத்திலும் குறைந்தபட்சம் ஒரு implementation-ஆவது அனுபவம் இருக்கவேண்டும் என்று கடுப்படித்தார்கள். திருமணம் ஆகவேண்டிய காலக்கட்டத்தில் எவ்வளவு நாட்கள் தான் வேலையில்லாமல் இருப்பது, எனவே IT கனவை மறந்துவிட்டு மீண்டும் துபாய்க்கே போய்விடலாம் என்று மனதை சமாதானப்படுத்திக்கொண்டு துபாய் கம்பெனிகளில் வேலை தேடி, கடைசியில் StorIT என்ற கம்பெனியில் இருந்து offer letter-ம் வாங்கியாயிற்று. அப்போது ஒரு பொதுவான நண்பன் மூலம் என்னோடு SAP Certification செய்த பிரபுஷங்கரிடம் பேசினேன். அவர் அப்போது ஒரு கம்பெனியில் சேர்வதாக இருந்தார். எனக்கும் அதே இடத்தில் வேலை வாங்கிக்கொடுத்து எனது IT கனவுக்கு உயிர்கொடுத்தார். அந்த சமயத்தில் பிரபுவை மட்டும் சந்திக்காமல் போயிருந்தால் இந்நேரம் எனக்கு பிடித்த IT field-ல் இல்லாமல் மீண்டும் துபாயில் Sales-ல் இருந்திருப்பேன். அதனால் எனக்கு பிரபு மீது அளவு கடந்த மரியாதை. பிறகு நாங்கள் வேலை செய்த இடத்தில் எனது மிக நல்ல நண்பராக மாறினார். எனக்கு வருத்தமான விஷயம் என்னவென்றால் இப்போது அவர் IT-யை விட்டு விலகிவிட்டு Hotelier-ஆக மாறிவிட்டார். அவர் எந்த தொழில் செய்தாலும் அதில் நிச்சயம் வெற்றிகரமாக வருவார்.

திரு. இளங்கோ: இது கடந்த வருடம் 2009-ல் நடந்தது. எனது துபாய் பயணத்துக்கு எல்லாம் ஏற்பாடாகிவிட்டது. அப்போது தான் கவனித்தோம் எனது பாஸ்போர்ட்டில் 6 மாதங்களுக்கு தான் validity இருக்கிறது என்று. எனவே அங்கே 3 மாதங்களுக்கு மேலே தங்குவதில் பிரச்சனை வரும் என்று தெரிந்தது. புது பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தபோது ஏற்கனவே செய்திருந்த ஒரு சிறு தவறால் விசாரணைக்கு பிறகே பாஸ்போர்ட் மேலதிகாரியின் கவனத்திற்கு வரும் என்றும் அது நடக்க சில காலம் பிடிக்கும் என்றும் சொல்லப்பட்டது. அதுவாக நடப்பதற்குள் நான் துபாய் செல்லவேண்டிய தேதி தாண்டிவிடும். குறித்த தேதியில் செல்லவில்லை என்றால் என் வேலைக்கே கூட உலை வைக்கக்கூடும். வீட்டில் வந்து எல்லாம் முடிந்து போயிற்று என்று உட்கார்ந்தபோது அகிலா தன் தந்தையின் நண்பர் திரு. இளங்கோ அங்கிளை பற்றி சொன்னாள். அடுத்த நாள் அவரை போய் பார்த்தோம். என்ன பிரச்சினை என்று நிகழ்ந்தவற்றை பொறுமையாக கேட்டார். பின்னர் நடந்த தவற்றுக்கு திருத்தமாக என்ன செய்யவேண்டும் என்று சொல்லிவிட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பேசினார். பிரச்சினை தீர்ந்து குறித்த தேதியில் துபாய்க்கு போகமுடிந்தது. அன்று மட்டும் திரு. இளங்கோ துணைக்கு வரவில்லை என்றால் என்ன நடந்திருக்கும் என்பதை நினைக்கவே பயமாக இருக்கிறது.