Tamil
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

{mosimage}

கொஞ்ச நாட்களாக பார்த்த படங்களை பற்றி ஒன்றும் எழுதவில்லை... பெரிதாக காரணமில்லை - வெறுமனே சினிமா குறித்த பதிவுகள் குவிந்துவிட கூடாது என்கிற கவனம் தான். பின்பு பல படங்கள் ஒன்றாக சேர்ந்துவிட்டபடியால் ஒவ்வொன்றை பற்றியும் சுருக்கமாக சொல்லிவிடலாம் என்று முடிவு செய்து போட்ட பதிவு. என்னென்ன படங்கள் நான் சமீபத்தில் பார்த்தது? தமிழில் - ஊட்டி வரை உறவு, மறுபடியும், மலையாளத்தில் - வாஸ்தவம், தலப்பாவு, ஹிந்தியில் - Woh Kaun Thi, Anupama, Arth. மலையாள - வாஸ்தவம் / தலப்பாவு மற்றும் தமிழ் ஊட்டி வரை உறவு தவிர மற்றவை எல்லாம் veoh.com-ல் இருந்து Download செய்யப்பட்டவை. முன்பே சொன்னது போல - பல அரிய படங்கள் எல்லாம் veoh-ல் கிடைத்தது. எனவே இந்த பதிவு Veoh-க்கும், Google Videos-க்கும் மற்றும் இதை upload செய்த புண்ணிய ஆத்மாக்களுக்கும் சமர்ப்பனம்.

Tab Title 1

ஊட்டி வரை உறவு

{mosimage}இது மறைந்த ஸ்ரீதரின் படம் என்பதால் ‘காதலிக்க நேரமில்லை’ போல இருக்கும் என்று ஆர்வத்தோடு பார்த்தேன். ஆனால் ‘காதலிக்க..’வின் சமர்த்து இதில் சுத்தமாக இல்லை. ஆள் மாறாட்டத்தை கொஞ்சம் செண்டிமெண்ட் கலந்து கொடுத்து இருந்தார் ஸ்ரீதர். நாயகர்களான சிவாஜிக்கும், முத்துராமனுக்கும் அவ்வளவாக வேலை இல்லை. நாயகர்களுக்கே இந்த நிலைமை என்றால் நாயகிகளுக்கு என்ன சொல்வது? இந்த படத்தைவிட இதன் தயாரிப்பு பற்றி ஸ்ரீதர் சொன்னது தான் சுவாரசியமாக இருந்தது. நான்கு வருடங்களாக எடுக்கப்பட்ட இந்த படத்தின் கதை பலமுறை மாற்றப்பட்டதாம். ஒரு முறை பாதி எடுக்கப்பட்ட பின்பு அந்த கதை எம்.ஜி.ஆருடன் தான் நடிக்கும் ‘அன்பே வா!’ போல இருக்கிறது என்று நாகேஷ் சொன்ன பின்பு மீண்டும் வேறு கதை வைத்து முழுதும் எடுக்கப்பட்டதாம். கடைசியாக கே.ஆர் விஜயாவை வைத்து படமாக்கப்பட்ட ஒரு பாடல் திருப்தியாக இல்லாததால் ரிலீசுக்கு 4 நாட்களுக்கு முன்பு வேறு பாடல் பதிவு செய்யப்பட்டு (“தேடினேன் வந்தது”) படமாக்கியபோது தரை வேறாக தெரிய, பம்பாயில் வேறு படப்பிடிப்பிலிருந்து அவசரம் அவசரமாக கொண்டுவந்து மீண்டும் படமாக்கப்பட்டு இணைக்கப்பட்டதாம். இத்தனை கஷ்டப்பட்டு எடுக்கப்பட்டது இந்த படத்தில் தெரிகிறது - சரியான திட்டமிடல் இல்லை என்பது. படம் அவ்வளவு மோசம் இல்லை எனினும் ‘காதலிக்க நேரமில்லை’யை பார்த்தபின்பு இந்த படம் சுவாரசியமில்லை என்பது எனது அபிப்பிராயம்.

மறுபடியும்:-
{mosimage}எனது All Time favourites-ல் இந்த படமும் ஒன்று. பல வருடங்களுக்கு பிறகு இந்த படத்தை 2 நாட்களுக்கு முன்பு தான் பார்த்தேன். பல இடங்களில் DVD/VCD-ஐ தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. கடைசியாக Google Videos-ல் யாரோ ஒரு புண்ணியவான் 1 வருடத்துக்கு முன்பு ஏற்றிவைத்து இருந்திருக்கிறார். அதை Download செய்து பார்த்தபோது இம்முறை படம் இன்னும் நன்றாக இருந்தது. ரேவதி நடிப்பில் பின்னியிருந்தார். குடும்பமே உலகம் என்று நினைத்து சந்தோஷமாக இருந்த துளசி (ரேவதி), தன் கணவனான திரைப்பட இயக்குநர் முரளி (’நிழல்கள்’ ரவி) நடிகை கவிதா (ரோகினி) கூட கள்ளத்தொடர்பு வைத்திருக்கிறான் என்று தெரிந்தவுடன், மீண்டும் தன் வாழ்க்கையை புதிதாக தொடங்குவதால் படத்துக்கு ‘மறுபடியும்...’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். காட்சிக்கு காட்சி பாலுமகேந்திராவின் ’டச்’ தெரிந்தது. நாடகத்தன்மையை ஓரளவுக்கு குறைத்து இயல்பாக நகர்த்தியிருந்தார். இளையராஜாவின் பாடல்கள் இனிமை என்றால், இதன் பின்னணி இசை ‘மாஸ்டர் பீஸ்’. அற்புதமான இசைக்கோர்வைகளை கேட்க முடிந்தது. பாலு மீது இருந்த மதிப்பை இந்த படம் குறைத்துவிட்டது. ஏன் என்று இதே பதிவில் பின்னால் சொல்கிறேன்.

Tab Title 2

வாஸ்தவம் (மலையாளம்)

{mosimage}பிருத்விராஜ் என்கிற நடிகன் மீது நல்ல அபிப்பிராயம் ஏற்பட இந்தப்படம் காரணமாக இருக்கும். பிருத்வியின் வயதையொத்த நடிகர்கள் எல்லாம் ஆக்‌ஷன் ஹீரோவாக, ‘நல்லவர்’களாக, அழகான நடிகைகளோடு ஆடிப்பாட, தங்களை அழகாக காட்டிக்கொள்ள (உ.ம் - சொம்பு நடிகர்) பிரயத்தனப்பட, பிருத்விராஜின் கவனமோ நல்ல கதையில், தன்னை வித்தியாசமாக நடிக்க அனுமதிக்கக்கூடிய ஸ்க்ரிப்டுகளில் இருக்கிறது என்பதை நிரூபிக்கும் படம் - ’வாஸ்தவம்’. ஒரு சாதாரண பிராமண குடும்பத்தில் பிறந்து, சூழ்நிலை காரணமாக தன் சிறுவயது காதலியான காவ்யா மாதவனை விட்டுவிட்டு தனக்கு செக்ரட்ரியேட் வேலையோடு வரும் சம்விருதா சுனிலை கல்யாணம் செய்துக்கொள்கிறார் பிருத்விராஜ். வேலைக்கு சேர்ந்த கொஞ்ச நாட்களிலேயே செக்ரட்ரியேட் வேலையின் நெளிவு சுளிவுகளை (லஞ்சம்) தெரிந்துக்கொண்டு, கூட வேலை செய்யும் ’ஈரம்’ சிந்து மேனனின் காம இச்சைகளை தீர்த்து அவரை ‘திருப்திப்படுத்தி’ அதற்கு பதிலாக மந்திரியின் பர்ஸனல் செக்ரட்டரியாக உயர்கிறார். வந்த இடத்தில் மந்திரியின் மனைவியின் நம்பிக்கைக்கு பாத்திரமாகி நிழல் மந்திரியாக ஆட்சி செய்கிறார் பிருத்விராஜ். தன் வழியில் வருபவர்களை இரக்கமின்றி கொன்று அகற்றும் பிருத்விக்கு கடைசியில் கிடைப்பது தனிமை. காட்சிக்கு காட்சி நெகடிவ் கதாபாத்திரத்தின் வெறியை உள்வாங்கி அந்த இரக்கமற்ற தன்மையை தன் கண்களாலேயே காட்டும் பிருத்விக்கு ஒரு பூச்செண்டு. கேரள மாநில சிறந்த நடிகருக்கான விருது இந்த படத்துக்கு கிடைத்ததில் வியப்பேதுமில்லை. 2:15 மணி நேரம் ஓடும் இந்த படம் நம்மை அடுத்து என்ன நடக்கும் என்று தெரிந்தபோதும் எப்படி நடக்கும் என்று ஆர்வமாக பார்க்க வைக்கிறது. Kudos to Prithvi. மம்மூட்டி, மோகன்லாலுக்கு அடுத்த ஸ்தானம் ஏற பிருத்விக்கு தகுதி உண்டு என்பதற்கு ‘வாஸ்தவம்’ ஒரு சான்று. ரூ. 30/-க்கு 3-இன்-1 மோசர்பேயர் DVD-ல் கிடைக்கிறது, தவறாமல் பாருங்கள்.

தலப்பாவு
{mosimage}தலைப்பாகை - பணக்காரர்களுக்கு அந்தஸ்து சின்னமாக இருந்தாலும், ஏழைகளுக்கு வியர்வையை துடைத்துக்கொள்ள உதவுகிறது. பொருள் ஒன்றே என்றாலும் அதன் பயன் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை சார்ந்தது என்பது படத்தின் கரு. 1970-ல் என்கவுண்ட்டரில் கொல்லப்பட்ட நக்சலைட் தலைவர் வர்கீசின் மரணம் ஜோடிக்கப்பட்டது என்று 35 வருடங்களுக்கு பிறகு சொன்ன கான்ஸ்டபிள் ராமச்சந்திரன் பிள்ளை சொன்ன வாக்குமூலத்தை ஆதாரமாக கொண்டு எழுதப்பட்டது. நக்ஸலைட் தலைவராக பிருத்விராஜும், கான்ஸ்டபிளாக (சண்டைகோழி வில்லன்) லாலும் நடித்திருந்தனர். நக்ஸலைட்டுகள் உருவான காரணமும் அந்த கொள்கைகள் பின்னர் நீர்த்துப் போனதையும் ஓரளவுக்கு யதார்த்தமாக சொல்லியிருந்தார்கள். முதலில் இதுவும் பிருத்விராஜ் நடித்த படம் என்பதால் பார்க்க அமர்ந்தேன். ஆனால் பிருத்விக்கு இதில் கௌரவ தோற்றம் மட்டுமே. அந்த ஏமாற்றத்தினால் முதலில் படத்தில் ஒட்டுதல் ஏற்படவில்லை. பின்னர் மீண்டும் ஒரு முறை பார்த்தபோது ‘Brilliant' என்று தோன்றியது. Melodrama கொஞ்சம் கூடுதலாக இருந்தது. முன்பு தமிழில் வந்த ‘கண் சிவந்தால் மண் சிவக்கும்’ படத்தின் சாயல் இருந்தது உறுத்தல். புதுமுகம் தன்யா மேரி பார்வையாளர்களின் பரிதாபத்தை அள்ளிக்கொள்கிறார். பிருத்வியின் நடிப்பு கனக்கச்சிதம். அதுல் அக்னிஹோத்ரி கொஞ்சம் நேரம் வந்து பயமுறுத்திவிட்டு இறந்துபோகிறார். பொழுதுபோக்கவேண்டும் என்று பார்ப்பதானால் இந்த படம் பார்க்க வேண்டாம். நல்ல படம் பார்க்கும் ஆர்வம் இருந்தால் தாராளமாக பாருங்கள்.. கொஞ்சம் கூடுதல் கண்ணீரை பொறுத்துக்கொள்ளும் பொறுமையையும் சேர்த்துக்கொள்ளுங்கள். இதுவும் அதே 3-இன் -1 DVD-யில் இருந்தது தான்.

Hindi

Woh Kaun Thi (1964)
{mosimage}ராஜ் கோஸ்லா இயக்கிய இந்த 1964 வருடத்திய படத்தை நான் தேட் ஒரே காரனம் தான் - இதில் வந்த காலத்தை தாண்டி நிற்கும் “நைனா பர்ஸே... ரிம்ஜிம் ரிம்ஜிம்..” பாடல் தான். அந்த பாடலில் வரும் haunting quality கேட்கும் நம் மனதில் ஒருவித திகிலை / நிறைவேறாத பூர்வஜன்ம காதலை அதன் வலியின் தாக்கத்தை தெரிவிப்பதாக உள்ளது. சிறிய வயதில் ஞாயிற்றுக்கிழமை காலைகளில் வரும் ‘ரங்கோலி’ நிகழ்ச்சியில் வழக்கமாக ஒளிபரப்பப்படும்போது பார்த்ததிலிருந்து இந்த பாடலின் மீதும், இந்த படத்தின் மீது ஒரு ஈர்ப்பு. சாதனாவை மணந்துக்கொள்ளும் மனோஜ் குமாருக்கு தன் மனைவி மனுஷியா இல்லை பேயா என்று சந்தேகம் வருவது போல பல நிகழ்சிகள் நடக்கின்றன. கடைசியில் சாதனா பேயா இல்லை மனுஷியா என்று உண்மை வெளிப்படும்போது படம் முடிகிறது. கறுப்பு வெள்ளையில் பல காட்சிகள் கவிதையாக உள்ளது. இந்தப் படம் தமிழில் ஜெயலலிதா - ஜெயசங்கர் நடித்து ‘நானே வருவேன்’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்டதாம். Courtesy: Veoh.com

அனுபமா (1966)
{mosimage}ஹ்ரிஷிகேஷ் முகர்ஜீயின் படம் என்கிற ஒரே காரணத்துக்காக Download செய்து பார்த்தேன். ரிஷிகேஷின் படங்கள் எல்லாம் மிக எளிமையாக இருக்கும். இயல்பான மனிதர்கள், யதார்த்தமான சூழ்நிலைகள் என வாழ்க்கையோடு இயைந்து இருக்கும். உதாரணம் - அபிமான், சுப்கே சுப்கே, மிலி... அதனால் அவருடைய படங்களை தேடிப்பிடித்து சேகரித்து வருகிறேன். அனுபமா (1966) - அருணுக்கு தன் காதல் மனைவி பிரசவத்தின் போது இறந்துவிடுவதால் துக்கத்தில் ஆழ்ந்துவிடுகிறார். மனைவியின் மரணத்துக்கு காரணமான / மரணத்தை நினைவுபடுத்திக் கொண்டிருக்கும் பிறந்த மகளை அவரால் நேசிக்கமுடியவில்லை. தன் தந்தையிடம் இருந்து அன்பு கிடைக்காததால் மௌனியாக முடங்கிய அனுபமாவின் வாழ்க்கையில் நுழையும் எழுத்தாளனால் வசந்தம் வீசுகிறது. அனுபமாவாக ஷர்மிளா தாகூர், எழுத்தாளராக - தர்மேந்திரா. ஷர்மிளாவுக்கு படம் முழுதும் மொனமாக கண்ணால் பேசும் கதாபாத்திரம். நம்மை பார்வையாலேயே கொள்ளையடிக்கிறார். அவருக்கும் சேர்த்து அவருடைய தோழியாக வரும் சசிகலா பேசிவிடுகிறார். அழகான மற்றும் சிறிய படம். ரொம்ப ரசித்து பார்த்தேன். பழைய படங்களில் இருக்கும் எளிமையும் இனிமையும் ஏன் தற்போதைய படங்களில் இல்லை என்ற வழக்கமான கேள்வியை மீண்டும் எழுப்பியது இந்த ‘அனுபமா’ படம், இந்த படத்தை 22 வருடங்களுக்கு பிறகு 1988-ல் ’ஒருவர் வாழும் ஆலயம்’ என்ற பெயரில் காப்பியடித்து, பிரபு, ரகுமான், ராது, சிவகுமார், அம்பிகா நடிக்க மேலும் சில கதாபாத்திரங்களை கூட்டி கொலை செய்திருந்தார்கள். பாவம் ஹ்ரிஷிகேஷ் முகர்ஜீ... தன்னுடைய கலைப்படைப்பு இப்படி கற்பழிக்கப்பட்டதை அறிந்தாரா என்று தெரியவில்லை. எனினும் இந்த இரண்டு படங்களிலும் இசை நன்றாக இருந்தது.

Arth (1982):-
{mosimage}மிக யதேச்சையாக தான் இதன் வீடியோவும் veoh-ல் கண்டுபிடிக்க முடிந்தது. ”மறுபடியும்...” படத்தின் மூலம் இது என்று எனக்கு 1992-லேயே தெரிந்தது. ஆனால் Arth-ஐ பார்க்கும் வாய்ப்பு இன்றுவரை கிடைக்கவில்லை. இது இதன் இயக்குநர் ’மகேஷ் பட்’டின் சொந்த கதையாம். அவருக்கும் நடிகை பர்வீன் பாபிக்கும் உள்ள உறவை அறிந்த அவர் மனைவி கிரணுக்கும் ஏற்பட்ட நிகழ்வுகளை கொஞ்சம் சினிமாப்படுத்தி எடுக்கப்பட்டதாம். மனைவியாக ஷபானா ஆஸ்மி, நடிகையாக ஸ்மிதா பாட்டீல், இயக்குநராக குல்பூஷன் கர்பந்தா, நண்பராக கிரண் ஆகியோர் நடித்திருந்தார்கள். பாலு மகேந்திரா நல்ல இயக்குநர் என்று இருந்தாலும் ஈயடிச்சான் காப்பியாக உதாரணம் - சட்டை அக்குளில் கிழிந்திருப்பது, வேலைக்காரி மாவு அரைக்க போவதாக சொல்வது, “ஸ்லேட்டில்” எழுதப்பட்ட பெயர்பலகை, என மூலத்தில் இருக்கும் fullstop, comma உட்பட எல்லாத்தையும் எடுத்திருப்பது அவர் மீதிருந்த மதிப்பை குறைத்தது. மகேஷ் பட்டின் சிறந்த படைப்புகளில் ஒன்றாக கருதப்படுவது இந்த ‘அர்த்’. நடிப்பு வகையில் பார்த்தால் ஷபானாவை விட ரேவதி கொஞ்சம் கூடுதலாக செய்திருந்தார் என்பது எனத் அபிப்பிராயம். ரேவதியின் நடிப்பில் பிற்பகுதியில் ஒரு அழுத்தமான சோகம் இருக்கும் ஆனால் ஷபானாவின் நடிப்பில் அந்த தைரியமான move-on தெரிந்தது. ஸ்மிதா பாட்டீல் schizophrenic நடிகையாக, உறவில் உள்ள பாதுகாப்பற்.ற தன்மையை அற்புதமாக வெளிப்படுத்தியிருந்தார். முதலில் ‘அர்த்’ பார்த்திருந்தால் ’மறுபடியும்..’ பிடிக்காமல் போயிருக்கலாம்.

Your text...

{jacomment off}