Temples
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

{mosimage}

மயில் ராவணனுக்கு உயிர் ஒரு குகைக்குள்ளே இருந்த தாமரை பூவுக்குள்ளே இருந்த வண்டுக்குள் இருந்ததாம். ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய சந்தோஷம் சில பொருட்களிடமும், சிலரிடமும் இருக்குமாம்.. என்னுடைய சந்தோஷம் எங்கே இருக்கிறது என்று கேட்டால் அது என்னோடு மட்டும் தான் இருக்கிறது என்பேன்.. இருப்பினும் என்னுடைய கொஞ்சூண்டு சந்தோஷம் இந்த கோவை நகரத்தில் காற்றில் கலந்து இருக்கிறது. அதனால் தானோ என்னவோ ஒவ்வொரு முறையும் கோவைக்கு வரும்போது வேறு மனிதனாக வருகிறேன். என் மனதுக்கு சந்தோஷத்தை unconditional-ஆக தரும் கோவை நகரம். அதனால் தானோ என்னவோ இங்கு வரும்போது என்னுடைய மற்ற உலகம் எல்லாம் மறந்து போய்விடும். கோவை வந்தால் எத்தனை நாட்கள் ஆனாலும் பரவாயில்ல - என்னுடைய மின்னஞ்சல்களை பார்ப்பதில்லை, சக ஊழியர்களுக்கோ அல்லது மற்ற நண்பர்களுக்கோ ஃபோன் செய்வதில்லை. இது வெறுமனே எனக்கான நேரம்... எனக்கு பிடித்த (அண்ணனுடைய) மகள் மீராவுடனும், பொள்ளாச்சி தெய்வகுள காளியம்மனுடனும் மட்டுமே செலவு செய்யும் நேரம். ஒவ்வொரு முறையும் மனதில் முறுக்கிவிட்ட ஸ்ப்ரிங்க் போல அலுவலக / மற்ற அழுத்தங்களை ஏற்றிக்கொண்டு துவள ஆரம்பிக்கும்போது கோவை வந்துவிட்டு போனால் மனது திரும்பவும் எத்தனை அழுத்தங்களையும் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு இலகுவாகவும், காலியாகவும் ஆகிவிடும். கடந்த ஆறு மாதங்களாக இந்தியாவில் இல்லாத காரணத்தால் கோவையை மிகவும் miss செய்தேன்... இந்த சிறு பயணத்தில் மீண்டும் அந்த சிலிர்ப்பு.


எனக்கு மிகவும் பிடித்த இடம் என்றால் பொள்ளாச்சியும், திருமூர்த்தி மலையும் என்று பட்டென்று சொல்லுவேன். எனக்கு அந்த இடங்களை அறிமுகப்படுத்திய (அப்போது) கூட பணிபுரிந்த டாக்டர் அரவிந்தனுக்கும், பாலமுருகனுக்கும் எனது நன்றிகள். ஒரு 2004 ஏப்ரல் ஞாயிற்றுக்கிழமையில் அவர்கள் என்னை மாசாணி அம்மன் கோவிலுக்கும் (பாலா அன்று வாங்கிக்கொடுத்த சிறிய மாசாணி அம்மன் படம் இன்றும் என்னுடைய purse-ல் உள்ளது), சேத்துமடை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கும் அழைத்துச் சென்றுவிட்டு தெய்வகுளம் காளி அம்மன் கோவிலுக்கு அழைத்துச்சென்றனர். அப்போது பாலமுருகன் என்னிடம் “இது சக்திவாய்ந்த அம்மன் கோவில், என்ன வேண்டிக்கொண்டாலும் நடக்கும். எனவே வேண்டிக்கொள்ளுங்கள்” என்றார். நானும் இரண்டு விஷயங்கள் வேண்டிக்கொண்டேன். அவை நடக்கிறதோ இல்லையோ, எனக்கு அந்த அம்மன் மீது unconditional-ஆக பிரியம் ஏற்பட்டுவிட்டது. அதற்கு பிறகு அடிக்கடி அந்த கோவிலுக்கு போய்வர ஆரம்பித்தேன். நான் வேண்டியதில் ஒன்று பிரமாதமாக நடந்தது, மற்றொன்று நடக்கவில்லை. ஆனால் நடக்காத விஷயத்தின் consequence-ஆக அடுத்து வந்த வருடங்களில் அடுத்தடுத்து திருப்பங்கள் உண்டானது. அந்த நடக்காத விஷயத்துக்குக்காக இப்போது நான் கவலை எல்லாம் படவில்லை. இன்றும் கூட நான் பல விஷயங்களை அந்த அம்மனிடம் சொல்கிறேன், அதில் பல நடக்கின்றன, சில இன்றுவரை நடக்கவில்லை. கடவுள் நமக்கு விதித்து இருப்பதை தரவேண்டிய நேரத்தில் கட்டாயம் தருவார் என்ற உண்மை புரிந்த காரணத்தால் வாழ்க்கையை ஒரு desperateness இல்லாமல் சீராக கொண்டுபோக முடிகிறது.

{mosimage}மாசாணி அம்மன் கோவில் பொள்ளாச்சியில் இருந்து 16 கி.மீ தூரத்தில் ஆனைமலைக்கு அடுத்த நிறுத்தத்தில் உள்ளது. கோவை / பொள்ளாச்சி வாழ் மக்களுக்கு கண் கண்ட தெய்வமாக விளங்குவது இந்த மாசாணி அம்மன். பொதுவாக அமாவாசை / பௌர்ணமி / நாள் நட்சத்திரம் அன்று மட்டுமே கூட்டம் அள்ளும். மற்ற நாட்களில் போனால் நிறைவாக அம்மனை தரிசிக்கலாம். முன்பு நான் போனபோது எல்லாம் சிறிய கிராம தேவதை கோவிலாக, கோவிலை ஒட்டிய தென்னந்தோப்பில் பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்த புளி சாதம், தயிர் சாத பிரசாதங்களை சாப்பிட்டுவிட்டு பக்கத்தில் உள்ள நீரோடையில் கால்களை நனைத்துக்கொண்டு கோவிலுக்கு போவது என்று இயற்கையோடு ஒட்டியிருந்தது. ஆனால் இப்போது கூட்டம் காரணமாக கோவில் விரிவாக்கம் நடைபெற்று வருகிறது. மேலும் கோவிலை சுற்றி நிறைய கடைகள் வந்துவிட்டன. அந்த வழக்கமான அமைதி கொஞ்சம் கொஞ்சமாக பறிபோவதை உணரமுடிகிறது. அதை அடுத்து காளியாபுரத்தில் இருப்பது தான் தெய்வகுளம் காளியம்மன் கோவில்.

தெய்வகுளம் காளியம்மன் கோவில் என்றால் வழக்கமான கோவில் அல்ல. 6 ஆடிக்கு 6 அடி பரப்பளவில் 6-6.5 அடி உயரத்தில் கூரை போடப்பட்டு, ஒரு 1 அடி உயர கல்லில் கண் வைத்து பூ அலங்காரம் செய்யப்பட்ட சின்ன கோவில். அந்த வளாகத்தில் இரண்டு பெரிய மண் குதிரைகளும், ஒரு பிள்ளையார் கோவிலும், மரத்தடியில் சப்தமாதாக்கள் வைக்கப்பட்டுள்ளது. உள்ளே இருக்கும் (தெய்வ) குளத்தில் இருந்து சுத்துப்பட்டியில் நடக்கும் கோவில்களுக்கு தண்ணீர் கொண்டுபோகப்படுகிறது. அதனால் தான் இந்த கோவிலுக்கு தெய்வகுள காளியம்மன் கோவில் என்று பெயர். ஆனால் அந்த இடத்தில் நுழைந்ததுமே காரணமே இல்லாமல் நம் மனதில் ஒரு அமைதி பரவுவதை உணரலாம். எனக்கு இந்த இடத்துக்கு வந்தால் கடவுளிடம் நேரடியாக பேசுவது போன்ற ஒரு உணர்வு. அந்த அனுபவத்துக்காகவே ஒவ்வொரு முறையும் வருகிறேன். தனியாக வருகிறேன். இந்த கோவிலுக்கு வருவதற்கு போதிய பஸ் வசதி இல்லாததும் இந்த இடம் அமைதியாக விளங்குவதற்கு ஒரு காரணம். பொள்ளாச்சியில் இருந்து 34 A, 11 A ஆகிய இரு பஸ்கள் மட்டுமே வருகிறது. இல்லை என்றால் சேத்துமடையில் (இதற்கு அடிக்கடி பஸ்கள் உண்டு) இறங்கி, அருகில் உள்ள தார்ச்சாலையில் 1.5 - 2 கி.மீ அழகான வயல்களின் ஊடே நடந்து போனால் தெய்வகுளம் காளியம்மன் கோவிலுக்கு போய்விடலாம். இந்த பாதையில் நடப்பதும் ஒரு சுகமான அனுபவம். பரம்பிக்குளம் மலைத்தொடர்களின் அடிவாரத்தில் பச்சை பசேல் என தென்னை மரத்தோப்புகளின் ஊடே, சிலுசிலு சாரலின் போது நடப்பது என்பது அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும்.

மாசாணி அம்மன் கோவில், தெய்வகுளம் காளியம்மன் கோவில் எல்லாம் கிராம தேவதைகள். தீண்டாமை கோலோச்சிய அந்த காலத்தில், வயலில் வேலை செய்தவர்களுக்கு ஊருக்குள் இருக்கும் மேல் சாதி / பிராமண ஆதிக்கம் நிறைந்த கோவில்களில், குறிப்பாக mainstream கடவுள்களான - சிவன் / விஷ்ணு / லட்சுமி / பார்வதி முதலான தெய்வங்களின் கோவில்களில் அனுமதியும், அடிப்படைநிலை மரியாதையும் கூட மறுக்கப்பட்டது. அப்போது இந்த கீழ்நிலை மனிதர்களுக்கு தங்களுடைய வேண்டுதல்களை கேட்க, தாங்கள் பூஜிக்க என்று ஒரு தெய்வம் / ஒரு வடிகால் தேவைப்பட்டதால் உருவாக்கப்பட்டவை இந்த கிராம தேவதைகள். அதனாலேயே இதன் வழிபாட்டு முறைகளும் அவர்களுடைய வாழ்க்கை முறையை ஒத்து இருக்கும் - கள் / மாமிச கறி வைத்து படைப்பது, பூஜைகள் முழுவதும் வேதாகம முறைப்படி இல்லாமல், திருவிழாக்கள் எல்லாம் ஓய்வு / அறுவடை சமயத்தில் கொண்டாட்டமாக, இரைச்சலான இசை / கூத்து என அவர்களுக்கு ஓய்வு தருவதாக அமைந்திருக்கும். எனக்கு இந்த கிராம தேவதை வழிபாட்டில் உள்ள நேர்மை மிகவும் பிடிக்கும். உங்களுக்கும் தெய்வத்துக்கும் நடுவே எந்த வித manipulative Godman-கள் இல்லை. உங்கள் மனதில் உள்ளதை நேரடியாக தெய்வத்திடம் சொல்லலாம். தேவை இல்லாத complex-ஆன சம்பிரதாயங்கள் இல்லை. மாசாணி அம்மன் கோவிலில் அம்மனுக்கு சீட்டு எழுதுவது என்ற பழக்கம் உண்டு. உங்கள் மனதில் உள்ளதை ஒரு கடிதமாக எழுதி அம்மனின் கையில் கட்டிவிடலாம். அதை அம்மன் படித்து உங்கள் செய்தியை நேரடியாக கிரகித்துகொள்வதாக நம்பிக்கை. இது மட்டும் இல்லாமல் - சில பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் ஏமாற்றப்பட்ட ஆதங்கத்தை தணித்துக்கொள்ள, தங்களை ஏமாற்றியவர்களை அம்மனின் துணை கொண்டு பழிவாங்க, மிளகாய் அரைத்து போட்டு ஆறுதல் தேடிக்கொள்கிறார்கள். உயர்நிலை கோவில்களில் இதற்கு என்று complex-ஆக யாகமும் / புனஸ்காரங்களும் செய்வது வழக்கம்.

ஒரு முறை எனது சிறிய வயதில் (7 - 8 வது படித்துக்கொண்டிருந்ததாக ஞாபகம்), கடலூரில் கூத்தப்பாக்கத்தில் இருந்த ராகவேந்திர பிருந்தாவனத்துக்கு போயிருந்தேன். அந்த சமயத்தில் பிருந்தாவனத்துக்கு மிக regular-ஆக போய்க்கொண்டு இருந்தேன். அப்போது ஒரு நாள் அந்த ஐயர் தீர்த்தம் கொடுக்கையில் “கையை கீழே வைத்து வாங்கு... உன் கை என் மீது பட்டுவிட்டால் என்னால் 7 முறை ஸ்நானம் பண்ண முடியாது” என்றான். எனக்கு பயங்கர கோபம் வந்துவிட்டது. அந்த சமயத்தில் எல்லாம் நான் ராமாயணமும், பெரிய புராணமும் முழுவதுமாக படித்து இருந்ததால் - மனதளவில் புனிதமாக இருப்பதற்கும், உடலளவில் சுத்தமாக இருப்பதற்குமான வித்தியாசம் நன்றாகவே புரிந்து இருந்தது. அந்த பிருந்தாவனத்து ஐயர் அப்படி சொன்னதால் வந்த கோபத்துக்கு, கையில் இருந்த தீர்த்தத்தை கீழே கொட்டிவிட்டு வந்தவன் தான்... இன்னும் அந்த பக்கம் கூட எட்டிபார்ப்பதில்லை.... எந்த ராகவேந்திர பிருந்தாவனத்துக்கும் செல்வதில்லை. ஒரு தெய்வம் என்னுடைய தீண்டலை தீட்டாக பார்ப்பதை அனுமதிக்கும் என்றால் எனக்கு அந்த ’சுத்த பத்தமான’ தெய்வம் தேவை இல்லை. அந்த நிகழ்ச்சிக்கு அப்புறம் எவ்வளவு பெரிய கோவிலானாலும் பரவாயில்லை, நான் தெய்வத்தை தொழுதுவிட்டு, திருநீறு குங்குமம் வாங்குவதற்கு கூட ரொம்ப காத்திருப்பது இல்லை. எனக்கும் தெய்வத்துக்கும் இடையே பூஜை மூலம் translate செய்ய இந்த ஐயர் யார்? என் நேரடியான வேண்டுதல் தெய்வத்துக்கு கேட்கவில்லை என்றால் இவர் சொல்வது மட்டும் கேட்குமா என்ன?

நான் 2004-இல் இருந்து பலமுறை பொள்ளாச்சிக்கும், அங்கே இருக்கும் மாசாணி அம்மன் கோவிலுக்கும், தெய்வகுள காளியம்மன் கோவிலுக்கும் மற்றும் திருமூர்த்தி மலைக்கும் போய்க்கொண்டு இருக்கிறேன் ஆனால் 2 முறை மட்டுமே கூட யாரையாவது அழைத்துக்கொண்டு போயிருக்கிறேன். காரணம் பெரிதாக ஒன்றுமில்லை - எனக்கு இந்த இடங்கள் மனதளவில் மிக பிடித்தவை. அதனால் அங்கே போகும் போது என்னுடைய கவனம் கூட வந்தவர்களிடம் போகக்கூடாது என்ற எண்ணம். மேலும் எனக்கு பிடித்த அளவுக்கு உடன் வருபவர்களுக்கு பிடிக்குமா என்பது சந்தேகம். அதுவும் கூட மற்றொரு காரணம். இருப்பினும் ஒரு முறை அம்மாவை அழைத்துக்கொண்டு போனேன். அம்மாவுக்கு இடம் பிடித்திருக்கிறதா என்று கொஞ்சம் சந்தேகமாகவே இருந்தது. வரும்போது கேட்டதற்கு ‘இடங்கள் அழகாக இருந்தன, பிடித்தது’ என்று சொன்னார்கள். எனினும் எனக்கு இந்த இடங்களுக்கு தனியாக போவது தான் பிடித்து இருக்கிறது. திருமூர்த்தி மலைக்கு போவது பற்றி பின்னொரு முறை எழுதுகிறேன்.

கோவை (உக்கடம் பஸ் நிலையம்) to பொள்ளாச்சி - 1 மணி நேரம் / 40 கி.மீ / ரூ. 12/-
பொள்ளாச்சி to மாசாணி அம்மன் கோவில் - நிறைய பஸ்கள் / 30 நிமிடங்கள் / 16 கி.மீ / ரூ. 4.50/-
மாசாணி அம்மன் கோவில் to தெய்வகுள காளியம்மன் கோவில் - 11 A மற்றும் 34 A / 10 கி.மீ / ரூ. 4.00/-
மாசாணியம்மன் கோவில் to சேத்துமடை - நிறைய பஸ்கள் / 8 கி.மீ / ரூ. 4.00
பொள்ளாச்சி to தெய்வகுள காளியம்மன் கோவில் - 11 A மற்றும் 34 A / 24 கி.மீ / ரூ. 6.00/-. பஸ்கள் இந்த ரூட்டில் குறைவு தான்... 1 மணி நேரத்துக்கு ஒன்று என்ற வீதத்தில்... இரவு 7:30 வரை மட்டுமே. வெகு நேரம் வெறுமனே காத்திருக்கவேண்டி இருக்கும். மேலும் மழைக்காலங்களில் காளியாபுரம் சாலை பழுதாகிவிடும், எனவே அந்த பஸ்கள் கேன்ஸல் செய்யப்படும். அதனால் தான் சேத்துமடைக்கு சென்றுவிட்டு அங்கே இருந்து நடந்து செல்வது நல்ல அனுபவம்.

நீங்கள் இயற்கையின் சூழலில் அமைதியை விரும்புபவராக இருந்தால் இந்த பொள்ளாச்சி கோவில்களும், திருமூர்த்தி மலையும் உங்களை திரும்ப திரும்ப வரவைக்கும்.

{oshits} வாசகர்கள்.... இந்த பதிவை படித்து உள்ளனர்.