Tamil
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

{mosimage}

’பூ’ என்ற இந்த படத்தின் பெயரை பார்வதி என்றே வைத்திருக்கலாம் என்று சொல்லும் அளவுக்கு பின்னி எடுத்திருக்கும் பார்வதிக்கு எல்லோரும் ஜோரா ஒரு தடவை கை தட்டுங்க..... ’சொல்லாமலே...’, ‘ரோஜாகூட்டம்’, ‘டிஷ்யூம்’ என காதலை மட்டும் விதம் விதமாக சொல்லும் இயக்குநர் சசிக்கு வேறு எதுவும் தெரியாதா என்ற என் ஆதங்கத்தை கூட ரொம்ப நேரம் மறந்துவிட்டேன். பார்ப்பவர்களின் மனதில் நினைவுகளை கொத்து நெருஞ்சி முள் போல தைத்து, காயத்தின் வடு போல நம் மனதில் ரொம்ப நாள் தங்கியிருக்கும் இந்த வாசனை ‘பூ’. படத்தின் ஆரம்பத்தில் கணவனுடன் இத்தனை சந்தோஷமாக இருக்கும் மாரிக்கு தன் முறைமாமன் தங்கராசுவுடன் அத்தனை தீவிரமான காதல் இருந்தது, இருந்தாலும் எப்படி சந்தோசமாக இருக்கிறாள்? ”ஒருத்தரை கட்டிக்க முடியலைன்னா அவங்களை மறந்திடனுமா?” என்ற மாரியின் கேள்வி தான் படத்தின் உயிர் நாளம்.


பெரியவளான பிறகு என்ன செய்யப்போகிறாய் என்கிற கேள்விக்கு “நான் தங்கராசுவுக்கு பொண்டாட்டியாகப் போறேன் சார்” என்று தைரியமாக பறைசாற்றும் மாரிக்கு, பருவம் வந்த பிறகும் விதையாய், விருட்சமாய் வளர்ந்து வேரூன்றிவிட்ட அந்த காதலை முறைமாமன் தங்கராசுவிடம் சொல்ல தயக்கமோ தயக்கம். அந்த காதல் ஏன் கைகூடவில்லை? இந்த கேள்விகள் திரையில் விரியும்போது நம் மனதில் இனம் புரியாத வலி ஒன்று ஏற்பட்டு இருப்பதை உணரலாம். முடிவில் மொட்டை வெயிலில் பஸ் ஸ்டாப்பில் ஒரு கதறு கதறுகிறாளே மாரி, என் குடல், குலையெல்லாம் ஒரு தடவை ஆட்டம் கண்டுவிட்டது. அந்த வலியை புரிந்துகொள்வது வெகு சிலருக்கே சாத்தியம்.

இது படமா எடுக்கப்பட்டதா இல்லை கிராமத்தில் மக்களுக்கு தெரியாமல் கேமிராவை வைத்து பதிவுசெய்யப்பட்டதா என்பது படம் பார்க்கும் யாருக்குமே தோன்றும் சந்தேகம். மாரியின் வீடும், சுற்றுப்புறமும் சினிமா செட் என்று யாரும் உணர்ந்திருப்பார்களா என்பது கேள்விக்குறியே. படம் முழுக்க முழுக்க யதார்த்தம். அந்த கள்ளி செடிகளும், பஸ்ஸில் ஒலிக்கும் இளையராஜாவின் 80-களின் பாடல்களும், கோவிலில் இசைக்கப்படும் “கற்பூர நாயகியே..” பாடலும், டீக்கடையும்... அச்சு அசல் கிராமம். படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே நாம் நம் சுற்றுசூழல் மறந்து கிராமத்தில் இருக்கிறோம்.

{mosimage}படம் முழுக்க பார்வதியின் ராஜ்ஜியம் தான். இந்த பெண்ணுக்கு இருப்பது முகமா அல்லது discotheque-ல் இருக்கும் straboscope-ஆ? நொடிக்கு நூறு முகபாவங்கள் காட்டுகிறார். இந்த பெண்ணின் மெல்லிய தோளில் இவ்வளவு கனமான பாத்திரத்தை (படத்தையும் தான்) ஏற்றிவைத்து இருந்தாலும், இலகுவாக சுமந்து நம் மனசில் சிம்மாசனம் இட்டு அமர்கிறார் இந்த திருவனந்தபுரத்து மல்லிகை. விட்டால் நான் பக்கங்களுக்கு பார்வதியை பற்றி எழுதிக்கொண்டு இருப்பேன், எனவே நான் பார்வதி பற்றி எழுதிய ஜொள்ளு பதிவின் முகவரி யை கொடுத்துவிட்டு பார்வதி புராணத்தை இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன். தன் கதாபாத்திரம் சிறியது என்று தெரிந்தும் படத்தை ஒப்புக்கொண்டு இருந்தாலும், வரும் நான்கு காட்சியிலும் பார்வதிக்கு ஈடுகொடுத்திருக்கும் ஸ்ரீகாந்த்துக்கு ஒரு ஷொட்டு. பேனாக்காரர் ராமுவும், மாரியின் அம்மா லட்சுமியும், தோழியான இனிகாவும் (இனியசெல்வி?), surprise item girl - பரவை முனியம்மா (சிவகாசி ரதியே), மற்றும் supporting characters-க்கு பொருத்தமான புதுமுகங்கள் என அம்சமான நடிகர்கள் தேர்வு.

{mosimage}சிறுகதையை படமாக்கும் போது சின்ன சின்ன சம்பவங்களுக்கு கூட நேரம் ஒதுக்கி பெரிதாக ஊதிக்காட்டியிருப்பதால் பின் பாதியில் கொஞ்சம் தொய்வு தெரிகிறது. குறிப்பாக ஆயில் மில் ஓனர் பெண்ணை மணக்க நிர்பந்திக்கப்படும் ஸ்ரீகாந்த், பார்வதியின் காதலை எண்ணி தடுமாறும் நேரத்தில் முடிவு எடுக்க தூண்டுகோலாக இருக்கும் ‘அலோ’ டீக்கடைக்காரரின் கதை கொஞ்சம் ஓவர் தான். ஆனால் படத்தில் ஏகப்பட்ட நல்ல விஷயங்கள் இருப்பதால், படம் முடிந்து வெளிவரும்போது இவற்றை நாம் மறந்துபோகிறோம். நம்புங்கள்! இந்த படத்தை நேற்று மாலை பார்த்தேன் (என் மனைவியுடன் பார்த்த முதல் படம்), ஆனால் இன்று இரவு இந்த விமர்சனத்தை எழுதும்போது நெஞ்சு பாரமாவதை தவிர்க்க முடியவில்லை.

”சூ! சூ! மாரி” பாடல் ‘அழகி’ படத்து பாடலை நினைவுபடுத்துவதை தவிர்க்கமுடியவில்லை. ‘ஆவாரம் பூ..” பாடல் ஒரே வார்த்தையில் சொன்னால் - அற்புதம்! மனதை மயிலிறகால் வருடுவது போல சுகம். ‘மாமன் எங்கிருக்கான்’ & ’சிவகாசி ரதியே’ இரண்டும் துள்ளலான இசை. எஸ். எஸ். குமரனின் பாடல்கள் இனிமை என்றபோதும் என் அபிப்பிராயத்தில் “அற்புதமான ஆரம்பம் ஆனால் பாடல்களின் நடுவில் ஏதோ ரொம்ப நேரம் பாடிவிட்டது போல ஒரு சலிப்பு”. பி.ஜி முத்தையாவின் ஒளிப்பதிவு அழகான வண்ணக்கலவை! வீர்சமரின் கலையமைப்பு மிகவும் நேர்த்தி.

{mosimage}எதிர்பாராமல் நேசிக்கத்தெரிந்தவர்களுக்கு இந்த படம் குறைந்தபட்சம் ஒரு வார தூக்கத்தை திருடப்போவது நிச்சயம். குறிப்பாக மாரி தான் காதலித்த மாமன் சந்தோஷமாக இருக்கிறான் என்று நம்பிக்கையோடு பார்க்கத்துடித்தவள், நிஜ நிலைமையை தெரிந்த பிறகு மனசு பொறுக்காமல் கதறுகிறாளே...... மற்றவர்கள் புரிந்துக்கொள்வது கொஞ்சம் கஷ்டமே! எனினும் இந்த படம் வணிகரீதியாக வெற்றி பெற்றால் என்னைவிட அதிகமாக சந்தோஷப்படுபவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள் (இதன் தயாரிப்பாளர்கள் கூட). I am keeping my fingers crossed at its performance at the box office.

{mosimage}சில வருடங்களுக்கு முன்பு நான் மலையாளத்தில் லெனின் ராஜேந்திரன் இயக்கி, சம்யுக்தா வர்மா நடித்த ‘மழா’என்ற படத்தை பார்த்தேன். (மழா படத்தை என் பார்வையில் இங்கே படிக்கவும் ) அதில் 16 வயதில் தமிழ்நாட்டுக்கு வரும் இசையார்வம் நிறைந்த சுபத்ராவுக்கு (சம்யுக்தா வர்மா) தன் இசை ஆசிரியர் சாஸ்த்ரிகள் மீது காதல் ஏற்படுகிறது. இதை எதிர்க்கும் சுபத்ராவின் தந்தை சாஸ்த்ரிகளுக்கு அவரின் முறைப்பெண்ணை மணம் முடித்துவிட்டு, இதை சுபத்ரா பார்க்கவைத்து ஊரை விட்டு அழைத்துக்கொண்டு போய்விடுகிறார். பல வருடங்களுக்கு பிறகு சுபத்ரா ஒரு டாக்டராக, தொழிலதிபருக்கு மனைவியாக ஒரு சந்தோஷமில்லாத மணவாழ்க்கையை வாழ்ந்துக்கொண்டு இருக்கிறாள். சாகும் தருவாயில் சுபத்ராவை புரிந்துக்கொண்ட அவள் கணவனின் விருப்பப்படி அவன் இறந்த பின் அஸ்தியை தமிழ்நாட்டுக்கு கறைக்க வருகிறாள். சாஸ்த்ரிகளேனும் சந்தோஷமாக இருக்கிறார் என்ற நம்பிக்கையில் பார்க்க வரும் சுபத்ராவுக்கு அவர் நிலைமைக்கு தன் நிலைமை எவ்வளவோ தேவலாம் என்று இருப்பதை கண்டு நதிக்கரையில் அமர்ந்து கண்ணீர் வடிப்பது போல ’மழா’ படம் முடிந்தது.

‘பூ’வும் கிட்டத்தட்ட இதே போன்ற கதை தான். காதலித்தவர்களை கல்யாணம் செய்துக்கொள்ள முடியவில்லை என்ற போதும், அவர்களின் சந்தோஷத்தை விரும்பும் தூய்மையான, எதிர்பார்ப்பு இல்லாத காதலை கிட்டத்தட்ட சுத்தமாகவே சொல்லியிருக்கிறார் சசி. பொழுதுபோக்குக்காக படம் பார்க்கும் சராசரி ரசிர்களை இந்த படம் கவர்வது கொஞ்சம் கஷ்டமே, இருப்பினும் சமீபத்திய வெற்றிகளான சுப்ரமணியபுரம், பருத்திவீரன் ஆகிய படங்களை மனதில் கொள்ளும்போது எங்கோ கொஞ்சம் நம்பிக்கை ஒட்டிக்கொள்வதை உணரமுடிகிறது.

என் 'பிரிவோம் சந்திப்போம்’ திரைப்பட பார்வையை படித்த ஒரு நண்பர் தான் அந்த படத்தை X2 ஸ்பீடில் பார்த்ததாகவும், எப்படி தான் இந்த படத்தை நான் பார்த்தேன் என்று கேட்டு பின்னூட்டமிட்டு இருந்தார். ’பூ’, ‘பிரிவோம் சந்திப்போம்’ போன்ற உணர்வுபூர்வமாக பார்க்கப்படும் பட்ங்களில் இந்த மெதுவான போக்குகள் தெரிவதில்லை. காரணம் அந்த படத்தினுள்ளில் நாம் நம்மையே எங்கோ பார்க்கிறோம். பொழுதுபோக்கிற்காக பார்க்கப்படும் ‘தசாவதாரம்’, ’ஃபூங்க்’ போன்ற படங்களில் நான் வேகத்தை எதிர்பார்க்கிறேன்.

{oshits} வாசகர்கள் இந்த ‘பூ’ பார்வைக்கு....