Hindi
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

{mosimage}

தாரே ஜமீன் பர்... (தரையில் நட்சத்திரங்கள்) - காதலும், கட்டிலும், குத்தாட்டமும் தான் வாழ்வின் ஜீவாதார பிரச்சினை, அதை தவிர்த்து வேறு எதுவும் மனித வாழ்வில் இல்லை என்று 'படம்' காட்டும் தமிழ் பட இயக்குனர்களை எல்லாம் ஒன்றாக கட்டுப்போட்டு இந்த படத்தை பார்க்கவைக்க வேண்டும். - இது தான் நான் 'தாரே ஜமீன் பர்' பார்த்து முடித்தவுடன் தோன்றியது. அதுவும் நடிகர் ஆமீர் கான் முதன்முதலாக இயக்கிய படம். புதுமுக இயக்குனர் என்ற சாயலே தெரியாமல் அனுபவ இயக்குனர் போல, தேர்ந்த, sensitive-ஆன இயக்கத்தை கொடுத்து, தைரியமாக இதனை சொந்தப் படமாக எடுத்து இருக்கும் ஆமீர் கானுக்கு வாழ்த்துக்கள். நம் வாழ்வின் முக்கியமான பருவமான குழந்தை பருவத்தையும், குழந்தைகளையும் சுற்றி வருமாறு அமைந்த படங்கள் மிக மிக குறைவு. அந்த வகையில் ஆமீர் கானின் 'தாரே ஜமீன் பர்.'-ஐ முக்கியமான படமாக கருதவேண்டிய அவசியம்.

Page 1

படத்தின் ஆரம்பத்தில் தன் பெயரை 'மாஸ்டர் தர்ஷீல் ஸஃபாரி' க்கு அடுத்து இரண்டாவதாக போட்டுக்கொள்வதிலேயே ஆமிர் கானின் 'விசுவாசம்' தெரிகிறது. தன் படம் என்றாலும், தான் பெரிய ஸ்டார், வணிகரீதியாக படத்தை தன் presence மூலம் காத்துக்கொள்ள முயற்சிக்காமல் இடைவேளையில் நுழைவது, அவர் மீது ஒரு மரியாதையையே கூட்டுகிறது. நீண்ட குளோசப் காட்சிகள், அளவான ஆனால் சக்திவாய்ந்த வசனங்கள் என மிக அழகாக இயக்கியிருக்கிறார். நான் இந்த படத்தை பலநூறு விமர்சனங்களையும், பலரின் word-of-mouth விளம்பரங்களையும் படித்த / கேட்ட பிறகே பார்த்தேன். இருந்தும் கடைசி காட்சிகளில் என்னால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. Infact 'அழகி'க்கு பிறகு நான் தாரை தாரையாக அழுதது இந்த படத்துக்கு தான். Hats Off!!! Aamir Khan. உங்கள் துணிச்சலின் / திறமையின் ஆயிரத்தில் ஒரு பகுதியாவது இந்த தமிழ் பட இயக்குனர்களுக்கு வரட்டும் என்று வேண்டிக்கொள்வதை தவிர வேறு எதுவும் தோன்றவில்லை.

{mosimage}அனைவரையும் அழ வைக்கும் இந்த படத்தின் கதை தான் என்ன? இஷான் அவாஸ்தி (மாஸ்டர் தர்ஷீல் ஸஃபாரி) ஒரு 3ம் வகுப்பு மாணவன். புத்தகங்களே அவன் முதல் எதிரி. மாறாக தன் சூழலை மிக அழகாக ரசிக்க முடிந்த ஆசீர்வதிக்கப்பட்ட குழந்தை. ஆனால் இந்த உலகத்துக்கு எதையும் விட மதிப்பெண்களே அவசியம். எனவே இஷான் அவமதிக்கப்படுகிறான். நல்ல புத்தி வரட்டும் என்று 'போர்டிங் ஸ்கூலுக்கு' அனுப்பப்படுகிறான். அந்த சூழலின் இறுக்கத்தில் மேலும் குறுகிப்போய் ஒரு நடைபிணம் போல நடமாடுகிறான். தெய்வாதீனமாக இஷான் மீதும் ஒரு ஆத்மா நம்பிக்கை, அன்பு வைக்க டிராயிங் மாஸ்டர் ராம் ஷங்கர் நிகும்ப் (ஆமிர் கான்) வடிவத்தில் வருகிறது. இஷானுக்கு இருப்பது மனநல குறைவு அல்ல, 'Dyslexia' எனப்படும் எழுத்துக்களை அறிந்துகொள்வதில் உள்ள சிறிய, குணப்படுத்தக்கூடிய குறைபாடே என்று அனைவருக்கும் புரியவைத்து, இஷானுக்கு தைரியம் அளித்து, தன்னம்பிக்கையை வளர்த்து, இந்த உலகத்தின் முன்பு அவனை மீண்டும் தலை நிமிர்ந்து நடக்க வைக்கிறார்.

படத்தின் மூலக்கருவே 'Dyslexia' பற்றிய விழிப்புணர்வு என்றபோதும், படத்தை ஒரு Documentry-தனமாக கொண்டுபோகாமல், நம் மனதை வருடும் தினசரி வாழ்வின் சில பக்கங்களாக அளித்து இருக்கும் ஆமீர் கானும், இந்த வித்தியாசமான கதையை எழுதிய அமோல் குப்தே-வும் பாராட்டுக்குரியவர்கள். சேதுவின் காமிராவும், சங்கர்-எஹசான்-லாயின் இசையும் படத்தோடு இழைந்து இருக்கிறது.

நம் மனதை கொள்ளையடிப்பது இஷானாக வரும் தர்ஷீல் ஸஃபாரி தான். அந்த துருத்திய எலி பல்லுக்குள்ளே இத்தனை வசீகரமான புன்னகையா என்ற வியப்பு அடங்கும் முன்பே தன் நடிப்பு திறமையால் நம்மை வாயை பிளக்க வைக்கிறான் தர்ஷீல். வளர்ந்த நடிகர்களே முகத்தில் expression-ஐ தேக்கி வைக்க முடியாமல் தினறும் போது, அனாயாசமாக நீளமான குளோசப் காட்சிகளில் அசத்தியிருக்கிறான். பல காட்சிகளில் தன் இயலாமையை மிக நுணுக்கமாக கண்களிலும், உதட்டசைவிலும் வெளிப்படுத்தி நெகிழ்த்தியிருக்கிறான். Filmfare Awards-ல் தர்ஷீல் 'சிறந்த குழந்தை நட்சத்திர'த்தில் இல்லாமல் 'சிறந்த நடிகர்' வரிசையில் போட்டியிடுகிறான் இந்த சுட்டி.

படம் இரண்டாவது பாதியில், ஆமீர் கான் நுழைந்தவுடன் 'விளக்க ரீதியாக' பயணப்படும் அந்த காட்சிகள் அனைத்தும் நெஞ்சை தொடுபவை. குறிப்பாக இஷானின் தந்தையை ஆமீர் கான் சைனீஸ் எழுத்துக்களை கொடுத்து படிக்க சொல்வதும், அதற்கு அவர் திருதிருவென முழிக்கும்போது சரமாரியாக திட்டும் ஆமீர்கான், அவர் அதிர்ச்சியில் இருந்து மீண்டதும் 'இப்போ உங்களுக்கு எப்படி இருந்ததோ, அது போல தான் உங்கள் குழந்தை தினம் தினம் அவமானத்தில் தவிக்கிறான்' என்று நெற்றிபொட்டில் அடிப்பது போல சொல்லும் காட்சி. 'Dyslexia'வை இதைவிட யதார்த்தமாக விளக்கமுடியுமா என்பது சந்தேகமே. ஆமீர் கான் இஷானின் வீட்டுக்கு போய்விட்டு வந்ததை சொல்லி இறுக்கத்தை தளர்த்தும் காட்சிகளில் தொடங்கிய என் அழுகை, க்ளைமேக்ஸில் தாரை தாரையாக வழிந்தோடியது. ஓவியப்போட்டியின் நாளன்று விடியற்காலையில் ஹாஸ்டலை விட்டு கிளம்பிய இஷான் எங்கே போனான்? என்று ஆமீரும், ராஜன் தாமோதரனும் (அந்த தமிழ் சிறுவனாக வரும் பையனின் நடிப்பு மிக அற்புதம்) பரபரக்க, ஓவியபோட்டியின் கடைசி நேரத்தில் அரங்கத்துக்கு உள்ளே நுழையும் தர்ஷீல் தன் அண்ணன் பரிசளித்த பெயிண்டை எடுத்து கம்பீரமாக வரையும் காட்சியில் என்னையும் அறியாமல் கைதட்டி மகிழ்ந்தேன்.